கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு -இறப்புகளில் முழுமையான தகவலை மூடிமறைத்த சீனா


கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு -இறப்புகளில்  முழுமையான தகவலை மூடிமறைத்த  சீனா
x
தினத்தந்தி 2 Dec 2020 4:27 PM GMT (Updated: 2 Dec 2020 4:27 PM GMT)

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு தொடர்பில் சீனா முழுமையான தகவலை வெளியிடாமல் மூடிமறைத்துள்ள சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.

பீஜிங்

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா தொற்று  உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  சீனா இதுவரை தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரழப்புகளின் எண்ணிக்கையை குறைத்தே வெளியிட்டு வந்துள்ளது.

சீனாவால் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததுடன், தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியிலும் களமிறங்கியுள்ளனர். ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்  ஏதுவும் எடுக்காத   மேற்கத்திய  நாடுகளில் பெரும் பொருளாதார அழிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2,478 புதிய பாதிப்புகளே கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தது.ஆனால் தற்போது கசிந்துள்ள ஆவணங்களில், உகான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் மட்டும் அதே நாளில் புதிதாக 5,918 நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கபட்டு உள்ளனர் என  தெரிய வந்துள்ளது.

2019-ல் மட்டும் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 என பதிவாகியிருந்த நிலையில், உலகிற்கு அவர்கள் வெறும் 44 எண்ணிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.இந்த எண்ணிக்கையையே உலக சுகாதார அமைப்பும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது.

மேலும், மார்ச் 7 அன்று ஹூபே மாகாணம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாகாணத்தில் மொத்தம் 2,986 பேர் இறந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது, ஆனால் உண்மையில் 3,456 பேர் இறந்துள்ளனர். சீனா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்து உண்மையான தகவல்களை வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.

சிஎன்என் செய்தி நிறுவனம்  வெளியிட்டு உள்ள தகவலில் ஹூபே மாகாண நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திலிருந்து கசிந்த ஆவணங்களின் 117 பக்கங்களில்  இந்த தகவல்கள் உள்ளதாக கூறி உள்ளது.

Next Story