சக்தி வாய்ந்த போர் விமானங்களை நார்வேக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்கா : ரஷியாவுக்கு எச்சரிக்கை


சக்தி வாய்ந்த போர் விமானங்களை நார்வேக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்கா : ரஷியாவுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2021 3:00 PM GMT (Updated: 9 Feb 2021 3:00 PM GMT)

ஆர்டிக் பிராந்திய விவகாரத்தில், ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக, அமெரிக்கா, தனது குண்டுவீசும் போர் விமானங்களை, நார்வேயில் நிலைநிறுத்த உள்ளது.

வாஷிங்டன்

ஆர்டிக் சர்வதேச வான்பரப்பு மற்றும், வடமேற்கு கடற்பிரதேசங்களில், தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த, ரஷிய அதிபர் விளாடிமர் புதின் முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆர்டிக் மண்டலத்தில் உள்ள நார்வே, ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு, ரஷியாவின் ஆதிக்கப் போக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஆர்க்டிக் பகுதியில் ரஷியா கடும்போக்கு நடவடிக்கை மேற்கொண்டால், அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷிய அதிபர் புதினுக்கு உணர்த்தும் வகையில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை நார்வேக்கு அனுப்ப உள்ளார்.

அமெரிக்க விமானப்படையின் குண்டுவீசும் திறன் கொண்ட, பி-1 எனப் பெயரிட்ட, 4 போர் விமானங்கள், நார்வேயின் ஆர்லேண்டு, விமானப் படை தளத்திற்கு அனுப்பப்பட உள்ளன. 

போர் விமானங்களுடன் 200 அமெரிக்க ராணுவத்தினரும் நார்வேயில் உள்ள ஆர்லாண்ட் விமானத் தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று வாரங்களுக்குள், ஆர்க்டிக் வட்டம் மற்றும் ரஷ்யாவின் வடமேற்கு கடற்கரையின் சர்வதேச வான்வெளியில் இந்த நடவடிக்கை தொடங்கும் என கூறப்படுகிறது.முன்னதாக ஆர்க்டிக் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை இங்கிலாந்து  முன்னெடுத்து வந்தது.

தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, ரஷியாவின் கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, ரஷியாவுடன் இணக்கமாக சென்ற டிரம்ப் அரசு போன்று, பைடன் அரசு இருக்காது என்றே கூறப்படுகிறது.

Next Story