இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் பங்கேற்கும் பாரம்பரிய திருவிழா; சார்ஜாவில் 20-ந் தேதி தொடங்குகிறது


இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் பங்கேற்கும் பாரம்பரிய திருவிழா; சார்ஜாவில் 20-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 16 March 2021 8:47 PM GMT (Updated: 16 March 2021 8:47 PM GMT)

இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் பங்கேற்கும் பாரம்பரிய திருவிழா சார்ஜாவில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.

சார்ஜா பாரம்பரிய நிறுவனத்தின் தலைவரும், சார்ஜா பாரம்பரிய நாட்கள் குறித்த விழாக்குழு உயர்மட்டக் கமிட்டியின் தலைவருமான டாக்டர் அப்துல் அஜீஸ் அல் முசல்லம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரம்பரிய திருவிழா

சார்ஜாவில் பாரம்பரிய திருவிழா 18-வது ஆண்டாக வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், சவுதி அரேபியா, ஏமன், எகிப்து, இத்தாலி உள்ளிட்ட 29 நாடுகள் பங்கேற்கின்றன.

சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமியின் ஆதரவுடன் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை மற்ற நாட்டினரும் தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த விழா நடக்கிறது. மேலும் அந்த நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள், உடைகள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

கட்டுப்பாடுகள்

இதனையொட்டி பாரம்பரியம் மற்றும் கலாசாரம் குறித்த 20 சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சொற்பொழிவாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்த இருக்கின்றனர். கைவினைப் பொருட்கள் தொடர்பான 24 நிகழ்ச்சிகளும், 8 கண்காட்சிகளும், 500-க்கும் மேற்பட்ட பிற நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.

இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாண்டினீக்ரோ என்ற நாடு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறது. ‘கலாசார பாரம்பரியம் நம்மை ஒருங்கிணைக்கிறது’ என்ற தலைப்பில் இந்த விழாவானது நடத்தப்படுகிறது. இந்த விழா சார்ஜாவின் இதய பகுதியிலும், கோர்பக்கான் நகரின் பாரம்பரிய பகுதியிலும் நடக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த திருவிழா நடக்கிறது. வார நாட்களில் 3 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் பேரும் பங்கேற்கலாம். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவடைந்ததும் சானிடைசர் கொண்டு தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின் போது சார்ஜா போலீஸ் துறையின் தலைவர் சைப் அல் ஜாரி அல் சம்சி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இந்த திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி வரை நடக்கிறது.


Next Story