கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் 30ந்தேதி வரை இலங்கையில் அனைத்து பள்ளிகளையும் மூட முடிவு
இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வால் வருகிற 30ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன.
கொழும்பு,
இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் என்ற அளவில் உள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 647 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வடைந்த நிலையில் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள பள்ளிகளை மூடுவது என முதலில் முடிவானது. எனினும், இந்த இரு மாகாணங்களை தவிர்த்து பிற மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு கல்வி மண்டலங்களில் உள்ள பள்ளிகளை மூடுவது என கல்வி அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். இதுபற்றி அந்நாட்டு அமைச்சரவையின் ஊடக செய்தி தொடர்பு அதிகாரி கெஹெலியா ராம்புக்வெல்லா கூறும்பொழுது, கொரோனா பாதிப்பு உயர்வால் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் டியூசன் வகுப்புகளை வருகிற 30ந்தேதி வரை மூடுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story