கொரோனா அச்சுறுத்தல்: இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்


கொரோனா அச்சுறுத்தல்: இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்
x
தினத்தந்தி 18 May 2021 9:55 PM GMT (Updated: 18 May 2021 9:55 PM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு சூடான் தடை விதித்துள்ளது.

கார்டோவம், 

இந்தியவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த  பி.1.617- புதிய வகை கொரோனா வைரஸ் பரவலும் உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில், சூடானும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு வர தடை விதித்துள்ளது. 

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் மருத்துவ கட்டமைப்புகள்  போதிய அளவு இல்லதால் தொற்று பரவலை எதிர்கொள்ள தடுமாறி வருகிறது. இதனால், கூடுதல் கட்டுப்பாடுகளும் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

கல்வி நிலையங்கள் ஒருமாதத்திற்கு மூடப்பட்டுள்ளன. மத வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சூடானில் இதுவரை  34,272- பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் ஜூன் மத்திக்குள் நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிடும் என அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Next Story