ஒசாமா பின்லேடன் தியாகி என இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டார் - பாக். மந்திரி விளக்கம்


ஒசாமா பின்லேடன் தியாகி என இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டார் - பாக். மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 27 Jun 2021 11:58 PM GMT (Updated: 27 Jun 2021 11:58 PM GMT)

கடந்த ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான், ஒசாமா பின்லேடனை தியாகி எனக் கூறினார்.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர்” என்று  பேசியிருந்தார். இம்ரான்கானின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. 

இம்ரான்கான் மேற்கண்டவாறு பேசி ஏறத்தாழ ஒரு ஆண்டு ஆன நிலையில்,  இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி ஃபவாத் சவுத்ரி பேசியுள்ளார். ஃபவாத் சவுத்ரி கூறுகையில், “ இம்ரான் கான் வாய் தவறியே அவ்வாறு பேசிவிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். ஒசாமா, அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது. 

Next Story