இன்று விண்வெளி பயணம் மேற்கொள்கிறார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா


இன்று விண்வெளி பயணம் மேற்கொள்கிறார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா
x
தினத்தந்தி 10 July 2021 10:57 PM GMT (Updated: 10 July 2021 10:57 PM GMT)

ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார்.

வாஷிங்டன்,

விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும், இந்த நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக இன்று தனது விண்கலமான ‘யூனிட்டி 22’ ஐ அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு இன்று (11 ஆம் தேதி) விண்வெளிப் பயணம் மேற்கொள்ள உள்ளது. பிரான்சனுடன் சிரிஷா பண்ட்லா, பெத் மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக சிரிஷா பண்ட்லா இருக்கிறார். விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பண்டாலா பெற்றுள்ளார்.

முப்பத்தொரு வயதான சிரிஷா பண்ட்லா இந்தியாவில் பிறந்த இரண்டாவது நபராகவும், தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருப்பார். ஆந்திராவின் தெனாலியில் தனது முன்னோர்களை கொண்ட விண்வெளி பொறியாளர் ஆவார். ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார்.

நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து விண்கலம் இன்று புறப்பட உள்ளது. விர்ஜின் கேலக்டிக்டியின் இரட்டை விமானங்களுக்கு மத்தியில் ‘யூனிட்டி 22’ விண்கலம் பொருத்தப்பட்டுள்ளது. உடனடியாக, யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கி, விண்வெளி நோக்கி பயணத்தை தொடங்கும். 50,000 அடி உயர இலக்கை இரட்டை விமானங்கள் அடைந்ததும், அங்கிருந்து யூனிட்டி விண்கலம் விடுவிக்கப்படும். இந்த விண்கலம் மூலம் அடுத்தாண்டு முதல் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story