நியூயார்க்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு அறிவிப்பு


நியூயார்க்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு அறிவிப்பு
x
தினத்தந்தி 29 July 2021 11:27 AM GMT (Updated: 29 July 2021 11:27 AM GMT)

நியூயார்க்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு கிடைக்கும் என நியூயார்க் மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. 

தடுப்பூசி செலுத்துவதால் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல், மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்களை ஊக்கப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நியூயார்க் நகரில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என நியூயார்க் மேயர் டெ பிளாசியோ அறிவித்துள்ளார். நாளை (ஜூலை 30) முதல் செப்டம்பர் 2-வது வாரத்திற்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். 

மேலும், செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களுக்கு வாரம்தோறும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 71 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Next Story