பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிக மாகாண அந்தஸ்து


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிக மாகாண அந்தஸ்து
x
தினத்தந்தி 2 Aug 2021 1:30 AM GMT (Updated: 2 Aug 2021 1:30 AM GMT)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சிறிய பிராந்தியம் கில்கிட்-பால்டிஸ்தான். இது காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா கூறிவரும் நிலையில், இந்த பிராந்தியத்தை பாகிஸ்தானின் 5-வது மாகாணமாக அறிவிக்க அந்த நாட்டு அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் கில்கிட் பால்டிஸ்தானுக்கு தற்காலிக மாகாண அந்தஸ்து வழங்குவதற்கான சட்டத்தை தயார் செய்யும்படி கடந்த மாத தொடக்கத்தில் பிரதமர் இம்ரான்கான் சட்ட மந்திரி பாரிஸ்டர் பரோக் நசீமுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே அந்த சட்டத்தை பாகிஸ்தான் நீதித்துறை அதிகாரிகள் இறுதி செய்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் கில்கிட்-பால்டிஸ்தானின் சுப்ரீம் மேல்முறையீட்டு கோர்ட்டு ரத்து செய்யப்படலாம் மற்றும் பிராந்தியத்தின் தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்படலாம்‘‘ என கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்த வரைவு மசோதா பாகிஸ்தானின் அரசியலமைப்பு, சர்வதேச சட்டங்கள், ஐ.நா. சபையின் தீர்மானங்கள் குறிப்பாக காஷ்மீர் மீதான பொது வாக்கெடுப்பு, ஒப்பீட்டு அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் உள்ளூர் சட்டங்களை கவனமாகப் படித்த பிறகு தயாரிக்கப்பட்டுள்ளது என நீதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story