18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவலால் அலறுகிறது, சீனா


18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவலால் அலறுகிறது, சீனா
x
தினத்தந்தி 2 Aug 2021 2:21 AM GMT (Updated: 2 Aug 2021 2:21 AM GMT)

18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவியதால் சீனா அலறுகிறது.

டெல்டா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு வழங்கிய சீனா, இப்போது நடுக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளது. காரணம், டெல்டா வைரஸ். இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட உருமாறிய கொரோனாவான டெல்டா வைரஸ், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய நிலையில், சீனாவையும் விட்டுவைக்கவில்லை. சீனாவில் மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18-ல் டெல்டா வைரஸ் கால் பதித்து பரவி விட்டது.கடந்த 10 நாட்களில் 300-க்கும் மேற்பட்டோருக்கு அங்கு டெல்டா வைரஸ் தாக்கி இருக்கிறது. இந்த வைரஸ், மிக வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டிருப்பதால் சீனாவுக்கு இதன் பரவல், தலையில் இடியை இறக்கியதுபோலாகி இருக்கிறது. சீனா அலறிக்கொண்டிருக்கிறது.18 மாகாணங்களில் உள்ள 27 நகரங்கள், பதற்றத்தின் பிடியில் உள்ளன. தலைநகர் பீஜிங், ஜியாங்சு, சிச்சுவான் ஆகிய நகரங்கள், டெல்டா பரவியுள்ள முக்கிய நகரங்கள் என சீன அரசு நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ கூறுகிறது.

சுற்றுலா நகரத்தில் பாதிப்பு
நாடு முழுவதும் நடுத்தர மற்றும் அதிகளவிலான ஆபத்தான பகுதிகளின் எண்ணிக்கை நேற்று 95 ஆக அதிகரித்துள்ளது. பீஜிங் நகரில் நேற்று புதிதாக 3 பேருக்கு டெல்டா வைரஸ் தாக்கி உள்ளது. மூவரில் ஒருவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என அந்த நகர செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த 3 பேரும் சமீபத்தில் சுற்றுலா நகரமான ஹூனான் மாகாணத்தின் ஜாங்ஜியாஜி சென்று வந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.இந்த நகருக்கு கடந்த சனிக்கிழமையன்று 11 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் சென்று வந்திருப்பது அதிர வைத்துள்ளது. அவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கவலைப்படும் நிபுணர்
இந்த நகரில் டெல்டா வைரஸ் பரவியது குறித்து சீனாவின் முன்னணி சுவாச நோய் நிபுணர் ஜாங் நான்ஷன் கவலை தெரிவித்து இருக்கிறார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருகிற மக்கள், மோட்டார் வாகனங்கள், விமானங்கள், ரெயில்கள் தலைநகர் பீஜிங்கில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் நேற்று முன்தினம் வரையில் 93 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. 4,636 பேர் இறந்துள்ளனர். 1,022 பேர் இன்னும் சிகிச்சை பெறுகின்றனர்.

Next Story