ஸ்பெயின் விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து 50-க்கும் அதிகமானோர் மீட்பு


ஸ்பெயின் விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து 50-க்கும் அதிகமானோர் மீட்பு
x
தினத்தந்தி 19 Aug 2021 10:04 AM GMT (Updated: 19 Aug 2021 10:04 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து 53 பேர் ஸ்பெயின் நாட்டு விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மாட்ரிட்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் விமானத்தில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி வருகின்றனர். 

நேற்று முன்தினம் தலிபான்கள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டவர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், வெளிநாட்டு தூதரகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு அரசுகள் தங்கள் நாட்டு மக்களையும், தூதரக அதிகாரிகளையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் ஸ்பெயின் நாட்டு அரசு சார்பில் அனுப்பப்பட்ட மீட்பு விமானத்தின் மூலம் காபுல் விமான நிலையத்தில் இருந்து 53 பேர் இன்று மீட்கப்பட்டுள்ளனர். அந்த விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மாட்ரிட் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதில் 5 பேர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 48 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஸ்பெயின் நாட்டு வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட  500க்கும் அதிகமானோரை மீட்க திட்டமிட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.  

Next Story