பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை - ஜோ பைடன்
அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
நியூயார்க்,
அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிற இந்த வேளையில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் என உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.
இந்தநிலையில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
நமது பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். நாம் இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால பிரச்சினையை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நாம் அங்கு வெளியுறவுக் கொள்கை என்ற கதவுகளை திறந்துள்ளோம்.
ஆயுதங்கள் கொரோனா வைரசை வீழ்த்தாது. ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் அரசியல் சக்திகளால் கொரோனாவை வீழ்த்தலாம். சிகிச்சைக்கான வசதிகளை விரிவுபடுத்தி உலகில் உள்ள உயிர்களை காக்க வேண்டும். எதிர் காலத்தில் உலக சுகாதார பாதுகாப்புக்கான நிதிக்காக புதிய நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்.
பிளவுபட்ட உலகில் மீண்டும் ஒரு புதிய பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் 9/11 தாக்குதல் நடந்தபோது இருந்த அதே அமெரிக்கா தற்போது இல்லை. இன்று நாம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் அதிக திறனுடன் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story