வெளிநாடுகளைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசாக்களை அளிக்க இங்கிலாந்து அரசு திட்டம்


வெளிநாடுகளைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசாக்களை அளிக்க இங்கிலாந்து அரசு திட்டம்
x
தினத்தந்தி 26 Sep 2021 5:37 PM GMT (Updated: 26 Sep 2021 5:37 PM GMT)

இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுமார் ஒரு லட்சம் கனரக வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுவதாக லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேறியது. இதன் பின்னர் இங்கிலாந்தில் லாரி ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினால் பல மாதங்களாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டிருந்தது இந்த பிரச்சனையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், துறைமுகங்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் அனுப்பபடுகிறது. ஆனால், டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் பெட்ரோல் விநியோகம் தடைபட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இதர வாகனங்கள் காத்திருக்கின்றன. 

சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் உணவு பொருட்கள் உள்ளிட்ட இதர பண்டங்களின் விநியோகத்தையும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை, பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் டேங்கர் ஓட்டுனர்கள் பற்றாகுறையை சமாளிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த டேங்கர் ஓட்டுநர்களுக்கு, 5,000 தற்காலிக விசாக்களை அளிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story