உயரமான குன்றிலிருந்து சாகசம் செய்து நீரில் குதிக்க முயன்ற கால்பந்து வீரர் கூர்மையான பாறையில் மோதி உயிரிழப்பு!


Image credit: www.thesun.co.uk
x
Image credit: www.thesun.co.uk
தினத்தந்தி 16 May 2022 12:01 PM GMT (Updated: 16 May 2022 12:01 PM GMT)

ஸ்பெயினில் மஜோராகாவில் உள்ள உயரமான பாறையில் இருந்து குதித்ததில் முன்னாள் கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மேட்ரிட்,

ஸ்பெயினில் மஜோராகாவில் உள்ள உயரமான பாறையில் இருந்து குதித்ததில் முன்னாள் கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

முன்னதாக ஸ்பெயினில் தவறுதலாக பாறையில் இருந்து குதித்ததில் உயிரிழந்த சுற்றுலா பயணி யார் என்ற அடையாளம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், அவர் வேறு யாருமில்லை,  முன்னாள் சிறந்த கால்பந்து வீரர் மவ்ராத் லாம்-ரபாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டச்சு கால்பந்து வீரரான அவர் நெதர்லாந்தில் எஸ் பி வி விட்டீஸ்  அணிக்காக விளையாடியவர். 

31 வயதான மவ்ராத் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விடுமுறையை ஆனந்தமாக கொண்டாட ஸ்பெயினில் இருந்தார். அவர் மஜோராகாவில் உள்ள உயரமான குன்றிலிருந்து குதிக்க முயன்றார். அவர் நின்று கொண்டிருந்த உயர பாறையின் கீழே இருக்கும் தண்ணீரில் குதிக்க முயன்றார். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் கீழே குதித்த வேகத்தில், எக்குத்தப்பாக  கூர்மையான பாறைகளில் மோதி இறுதியில் நீரில் போய் விழுந்தார்.இதில் பெரிய சோகம் என்னவென்றால், அவரது குடும்பத்தினர் இதனை செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தனர். 

மேலும், இந்த சம்பவத்தை அவரது மனைவி கேமராவில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவில் அவரது மனைவி  ‘ஓ கடவுளே..’ என்று அலறி கதறுவது இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அதன்பின்னர்,  நடந்த பிரேதப் பரிசோதனையில், அவர் பாறைகளில் அடிபட்டு, அரை மயக்கத்தில்  தண்ணீரில்  மூழ்கி இறந்தது தெரியவந்தது.

டோம்ப்ஸ்டோனிங் என்பது சாகசப்பிரியர்கள் மற்றும் த்ரில்லிங் அனுபவம் தேடுபவர்கள் செய்யும் விபரீத சாகசம் ஆகும். இந்த சாகசம் கல்லறை ஸ்டண்ட் என்றழைக்கப்படுகிறது. அதில் உயரமான குன்றின் விளிம்புகளிலிருந்து தங்களைத் தாங்களே தூக்கி குதித்து கீழே உள்ள நீரில் போய் விழுவது வழக்கம். மேற்கண்ட முன்னாள் கால்பந்து வீரரும், ஒரு கல்லறை ஸ்டண்ட் செய்ய முயன்றார். ஆனால் அது விபரீதத்தில் முடிந்துள்ளது.


Next Story