ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை ஓயபோவதில்லை; புதினிடம் நெதன்யாகு பேச்சு


ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை ஓயபோவதில்லை; புதினிடம் நெதன்யாகு பேச்சு
x

ரஷிய அதிபர் புதினை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை ஓயபோவதில்லை என கூறியுள்ளார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

பணய கைதிகளை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பல் உள்பட ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.

இஸ்ரேல் மீது நடந்த ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பதிலடியாக, 11-வது நாளாக வான், தரை மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் பாதுகாப்பு படையும் தாக்குதலை நடத்தி வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலின்போது, காசா முனையில் வன்முறை தொடராமல் அதனை தடுக்கும் வகையில் புதின் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் சுட்டி காட்டினார் என்று ரஷிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமரும் பல்வேறு தலைவர்கள் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகளுடன் பேசி வருகிறார். எகிப்து, ஈரான், சிரியா மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களுடன் நெதன்யாகு இன்று தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய அத்தியாவசிய விசயங்கள் பற்றி அதிபர் புதினிடம் தெரிவிக்கப்பட்டது என ரஷியா அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

உயிரிழந்த இஸ்ரேல் நாட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் புதின் இரங்கல்களை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்திற்கான இலக்குகளை கொண்ட நடவடிக்கையை தொடர ரஷியா விரும்புகிறது என நெதன்யாகுவிடம் புதின் வெளிப்படுத்தியதுடன், அரசியல் மற்றும் தூதரக அளவிலான அமைதியான தீர்வை அடைய வேண்டும் என்றும் புதின் தெரிவித்து உள்ளார் என தி மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

எனினும், காசா முனை பகுதியில் ராணுவ மற்றும் அரசியல் கட்டுப்பாட்டை கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பை நீக்குவது என்பதே போரின் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது என சமீபத்திய மந்திரி சபை கூட்டம் தெரிவிக்கின்றது.


Next Story