அமெரிக்காவில் இந்திய மாணவர் அடித்துக் கொலை- வெளியான திடுக்கிடும் தகவல்


அமெரிக்காவில் இந்திய மாணவர் அடித்துக் கொலை-  வெளியான திடுக்கிடும் தகவல்
x

அரியானாவை சேர்ந்த விவேக் சைனி மேற்படிப்புக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கா சென்றார்.

வாஷிங்டன்,

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் சைனி (வயது 25). எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்காவுக்கு விவேக் சைனி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள லிதோனியா நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விவேக் சைனி படித்து வந்தார்.

தனது படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் விவேக் சைனி பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றி வந்த சூப்பர் மார்க்கெட் அருகே உள்ள வீதியில் போதைக்கு அடிமையான ஜுலியன் பவுல்க்னே என்பவர் சுற்றி வந்துள்ளார். வீடு இல்லாமல் வீதியில் கிடந்ததால் விவேக் சைனி இரக்கப்பட்டு பவுல்க்னேவிற்கு சூப்பர் மார்க்கெட்டில் தங்க இடம் கொடுத்து இருக்கிறார். அதோடு, பவுல்க்னேவிற்கு பிஸ்கட், கேக் உள்ளிட்ட உணவு பொருட்களையும் வழங்கியிருக்கிறார் விவேக் சைனி.

நாளடைவில் ஜுலியன் பவுல்க்னேவின் செயல்பாடு அச்சுறுத்தும் விதமாக இருந்ததால் உடனே அங்கிருந்து கிளம்புமாறு விவேக் சைனி கூறியுள்ளார். மேலும் உடனே கிளம்பாவிட்டால் போலீசிடம் புகாரளிப்பேன் என்று எச்சரித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த பவுல்க்னே, தனக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய நபர் என்று கூட பார்க்காமல், தன்னிடம் இருந்த சுத்தியலால் விவேக் சைனியை அடித்துள்ளார்.

50-க்கும் மேற்பட்ட முறை தாக்கியதில் விவேக் சைனி நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளியான பவுல்க்னேவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அமெரிக்காவில் இந்திய மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story