இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கிய லிஸ் டிரஸ்


இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கிய லிஸ் டிரஸ்
x

இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் போட்டியிடுகிறார்.



லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் நடைபெற்றது பற்றிய புகார் எழுந்தது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனக் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ள 30 அரசு அதிகாரிகள் பதவி விலகினர். மொத்தம் 58 மந்திரிகள் அரசில் இருந்து வெளியேறினர்.

இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். தனது நெருங்கிய சகாவான கஜானா தலைவர் நதீம் ஜகாவி, நாட்டின் நலனை முன்னிட்டு பதவி விலகும்படி கூறியதன் அடிப்படையில் ஜான்சன், கடந்த வியாழ கிழமை பதவி விலகினார். எனினும், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஜான்சன் இருந்த நிலையில், கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன.

போரிஸ் ஜான்சன் பதவி விலகலை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஜான்சன் மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் கடந்த வெள்ளி கிழமை புதிய பிரதமர் போட்டிக்கான தனது அறிவிப்பினை வெளியிட்டடார்.

இதேபோன்று, அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பாகிஸ்தான் வம்சாவளி சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், போக்குவரத்து மந்திரி கிரான்ட் ஷாப்ஸ், முன்னாள் வெளியுறவு மந்திரி ஜெரிமி ஹண்ட் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.

மேலும் அட்டார்னி ஜெனரல் சுயல்லா பிரேவர்மென், ஈராக் வம்சாவளி நதீம் ஜகாவி, நைஜீரிய வம்சாவளி கெமி பெடனாக், டாம் டுகெந்தாட் ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். இந்த போட்டியில் வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்டும் இணைந்து உள்ளார்.

இந்த சூழலில், இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் இறங்கியுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இதற்காக, இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அவர், உடனடியாக அதனை முடித்து கொண்டு லண்டனுக்கு திரும்பினார். எம்.பி. ரகுமான் சிஸ்டி போட்டியில் உள்ள சூழலில், லிஸ்சின் அறிவிப்பு ஆகியவற்றால், இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டி வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.

58 வயது நிறைந்த ஜான்சன் 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் நீடித்து வந்த நிலையில், கட்சிக்கு நன்கொடை அளிப்பவர்களுடன் நெருங்கியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடாவடித்தனத்தில் ஈடுபட்ட மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனது ஆதரவாளர்களை பாதுகாத்து வந்துள்ளார்.

நாடாளுமன்றத்தினை தவறாக வழிநடத்தியதுடன், பொதுமக்களுக்கு நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நடந்து கொண்டார் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுப்பப்பட்டன.

எனினும், வருகிற அக்டோபர் வரை அவர் பதவியில் நீடிக்க கூடும் என கூறப்படுகிறது. அதன்பின்னரே கன்சர்வேடிவ் கட்சியின் வருடாந்திர கூட்டம் நடத்தப்பட்டு ஜான்சனுக்கு பதிலாக மற்றொரு நபரை தேர்வு செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Next Story