மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதல்: 42 ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு


மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதல்: 42 ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு
x

டிரோன்கள், பீரங்கிகளை பயன்படுத்தி மாலி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 42 ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

பமாகோ,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மாலி. இங்கு ஜனநாயக ரீதியில் அமைந்த அரசு கடந்த 2020-ம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு, ராணுவம் ஆட்சி செய்கிறது. இந்த நாட்டில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆதரவினைப் பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்கள் மேற்கு ஆப்பிரிக்காவின் சாஹல் பிராந்தியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. அவர்களை ஒழிக்கிற நடவடிக்கையில் அந்த நாட்டின் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் பயங்கரவாத அமைப்புகளை வேரறுக்க முடியாமல் ராணுவமும் திணறி வருகிறது.

இந்த நிலையில் அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெசிட் நகரில் ராணுவ வீரர்களை குறிவைத்து, டிரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி அதிபயங்கர தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இந்த தாக்குதலில் 42 ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்களை நடத்திய பாணியை வைத்து, அவற்றை கிரேட்டர் சகாரா பிராந்திய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் நடத்தி இருக்கலாம் என ஊகிப்பதாக மாலி அரசு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுடன் ராணுவ வீரர்களும் பல மணி நேரம் மோதினர். இந்த மோதலில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த தாக்குதல்கள் நடந்தபோதும், இதுகுறித்து தகவல்கள் நேற்றுமுன்தினம் தான் வெளியாகி உள்ளன.


Next Story