பாகிஸ்தானில் மாணவியை சித்திரவதை செய்து வீடியோ வெளியிட்ட நபருக்கு கோர்ட்டில் தர்மஅடி கொடுத்த வழக்கறிஞர்கள்!


பாகிஸ்தானில் மாணவியை சித்திரவதை செய்து வீடியோ வெளியிட்ட நபருக்கு கோர்ட்டில் தர்மஅடி கொடுத்த வழக்கறிஞர்கள்!
x

பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் கோர்ட்டு வளாகத்தில், மாணவியை சித்திரவதை செய்த நபரை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணாத்தில் கதீஜா மஹ்மூத் என்ற இளம்பெண் இறுதியாண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த மாணவியை கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கதீஜா மஹ்மூத்தின் இரண்டு சகோதரர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால் பாதிக்கப்பட்ட கதீஜா மஹ்மூத் தனது வயதான தாயுடன் பைசலாபாத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அவளது வகுப்புத் தோழியான அன்னாவின் தந்தை ஷேக் டேனிஷ் என்பவர் கதீஜாvஐ மிகவும் விரும்புவதாக கூறி அவரை திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் கதீஜாவும் அவரது குடும்பத்தினரும் அந்த திட்டத்தை நிராகரித்தனர். "டேனிஷ் என் அப்பாவின் வயதுடையவர், இதை நான் அன்னாவிடம் சொன்னபோது, அவள் என் மீது கோபமடைந்தாள்" என்று கதீஜா கூறினார்.

அதன்பின்னர், டேனிஷ் தன் ஆட்களுடன் கதீஜாவை கடத்திச் சென்று திருமணம் செய்ய மறுத்ததற்காக சித்திரவதை செய்துள்ளார். தனது வீட்டின் அறைக்கு அழைத்துச் சென்று அங்கு அவளை பாலியல் ரீதியாக அவமானப்படுத்தி அந்த செயலை பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோக்கள் வைரலாக பரவியதையடுத்து, சந்தேக நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை விசாரிக்க சிறப்புக் குழுவை பஞ்சாப் போலீசார் அமைத்துள்ளனர்.15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டேனிஷ் மற்றும் அவரது மகள் உட்பட ஏழு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர், மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன. பிரதான சந்தேக நபர் ஷேக் டேனிஷ் ஒரு தொழிலதிபர் என்றும் அரசியல் கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

டுவிட்டரில் "ஜஸ்டிஸ்பார்கதிஜா" கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானில் டிரெண்டாக இருந்தது. இந்த வீடியோவை பார்த்து மக்கள் குற்றவாளிகள் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

கடந்த வியாழனன்று, ஷேக் டேனிஷை அவரது கூட்டாளிகளுடன் பைசலாபாத் செஷன்ஸ் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தியபோது, பாகிஸ்தான் வழக்கறிஞர்கள், கோர்ட்டு வளாகத்தில், மாணவியை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி தாக்கிய நபரை சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கினர்.

எனினும் போலீசார் டேனிஷை மீட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.


Next Story