பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல்.. 10 பேர் உயிரிழப்பு


பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல்.. 10 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 March 2024 11:53 AM GMT (Updated: 24 March 2024 11:54 AM GMT)

புயல் தாக்கியதில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரியோ டி ஜெனிரோ:

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக 62 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்த வெப்ப அலையைத் தொடர்ந்து திடீரென புயல் தாக்கியிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் இந்த வானிலை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story