1,000 விண்கற்களை பூமி கடக்கும் அரிய நிகழ்வு... இந்தியாவில் தெரியுமா?


1,000 விண்கற்களை பூமி கடக்கும் அரிய நிகழ்வு... இந்தியாவில் தெரியுமா?
x

Image Courtesy: indiatoday

ஒரே நேரத்தில் 1,000 விண்கற்களை பூமி கடந்து செல்லும் அரிய நிகழ்வு இன்றிரவு முதல் நாளை காலைக்குள் நடக்க இருக்கிறது.

வாஷிங்டன்,

நடப்பு ஆண்டில் மே மாதத்தில் முழு சந்திர கிரகணம் மற்றும் வானில் வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்கள் நெருங்கி வருதல் உள்ளிட்டவை நடந்து உலகிற்கு ஆச்சரியம் ஏற்படுத்தின. ஆனால், இந்த மாதம் முடிவதற்குள் மற்றொரு ஆச்சரியமும் நமக்காக காத்திருக்கிறது.

சூரியனை சுற்றி வட்ட பாதையில் 73பி/ஸ்க்வாஸ்மேன்-வாக்மேன் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் ஒன்று சுற்றி வருகிறது. ஒவ்வொரு 5.4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை முழுமையாக சுற்றி முடிக்கிறது.

இதனை ஜூலை மற்றும் ஆகஸ்டில் மாலை நேரத்தில் பூமியில் இருந்தபடி வானில் காணலாம். அதிக பிரகாசம் இல்லாத இந்த வால் நட்சத்திரம் கடந்த 1995ம் ஆண்டு உடைய தொடங்கியது.

கடந்த 1930ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வால் நட்சத்திரம், தனது பிரகாசம் குறைந்த தன்மையால் அதன்பின்னர் 1979ம் ஆண்டு வரை தெரியவில்லை. இதன்பின்பு 1995ம் ஆண்டு அதன் வெளிச்சம் கூடி, வெறும் கண்களால் பார்க்க கூடிய அளவுக்கு ஆற்றல் பெற்றது. ஆனால், அதன்பின்னர் அது உடைய தொடங்கியது.

இந்த வால் நட்சத்திரத்தின் உடைந்த பாகங்கள் டாவ் ஹெர்குலிட்ஸ் என அழைக்கப்படுகின்றன. இந்த உடைந்த பாகங்கள் மணிக்கு 1,000 விண்கற்களை மழையாக பொழிய கூடும் என சில வானியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். ஆனால், மற்றவர்கள் அதனை உறுதியாக கூறவில்லை.

இதுவரை 68 துண்டுகளாக இந்த வால் நட்சத்திரம் உடைந்து உள்ளது என கூறப்படுகிறது. சரி. இந்த விண்கற்களை நாம் எப்போது காண முடியும்? என்பது பற்றி நாசா விளக்கம் அளித்து உள்ளது.

மே 30ந்தேதி (இன்று) இரவில் இருந்து மே 31ந்தேதி (நாளை) அதிகாலைக்குள் வால் நட்சத்திரத்தின் உடைந்த பாகங்களை பூமி கடந்து செல்லும். இந்த பாகங்கள் மிக விரைவாக வெளியே தள்ளப்படும்போது, பூமிக்கு அருகே வந்து, எரிகல் மழையை நாம் காண கூடும்.

எனினும், இதனை இந்தியாவில் காண முடியாது. வடஅமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே காண முடியும். தெளிவான, இருண்ட வானில் வடஅமெரிக்க வானியலாளர்கள் டாவ் ஹெர்குலிட் மழையை காணும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இதன்படி, கிழக்கு கடற்கரை பகுதியில் அதிகாலை 1 மணியளவிலும், மேற்கு கடற்கரையில் இரவு 10 மணியளவிலும் இதனை காண முடியும்.


Next Story