தாய்லாந்து: பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து - 9 பேர் பலி
தாய்லாந்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
பாங்காக்,
தாய்லாந்து நாட்டின் நரதிவெட் மாகாணம் சுஹை கொலோக் பகுதியில் பட்டாசு குடோன் உள்ளது. இந்த பட்டாசு குடோனில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
மேலும், குடோனுக்கு அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும், இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 118 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அதேவேளை, வெடிவிபத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப்பணிகள் நடைபெற்றபோது வெல்டிங் செய்தபோது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ பற்றியதாகவும், இதன் காரணமாகவே இந்த பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.