யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள்


யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள்
x
தினத்தந்தி 21 Feb 2017 8:01 AM GMT (Updated: 21 Feb 2017 8:01 AM GMT)

மகாராஷ்டிராவில் உள்ள மால்ஷேஜ் காட் என்ற பகுதியில், வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை இருக்கிறது.

காராஷ்டிராவில் உள்ள மால்ஷேஜ் காட் என்ற பகுதியில், வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை இருக்கிறது. இந்த கோட்டையானது கடல் மட்டத்தில் இருந்து 1424 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிகரத்தை சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டு விடக்கூடாது. ஏனெனில் இந்தச் சிகரப் பகுதியில் இருந்து ஒரு நாணயத்தை நீங்கள் வீசி எறிந்தால், அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்தபடி கீழ் செல்லும் அதிசயத்தைப் பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அது சரி.. இந்தப் பகுதிக்கு ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?... இருக்கிறது..

இந்தப் பகுதியில் ஹரிஷ்சந்திரேஷ்வர் என்ற கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் வலதுபுறமாகச் சென்றால் ‘கேதாரேஷ்வர் குகை’ என்ற மிகப்பெரிய குகை இருக் கிறது. இந்த குகைக்குள் முழுவதுமே நீரால் சூழப்பட்ட நிலையில் பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றிலும் இடுப்பளவுக்கு நீர் சூழ்ந்திருக்கிறது. இந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதைக் கடந்து சிவலிங்கத்தின் அருகில் செல்வது என்பது கொஞ்சம் கடினமான வி‌ஷயம் என்கிறார்கள்.

இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு தூண்களும் சத்ய யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒவ்வொரு தூண் இடிந்து வருவதாகவும், கலியுகமான இந்த யுகத்தில் ஒரே ஒரு தூண் மட்டும் மீதம் இருப்பதாகவும் இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கலியுகத்தின் முடிவில் இந்த நான்காவது தூணும் இடியும் என்றும், அதுவே இந்த உலகத்தில் ஊழி காலமாக இருக்கும் என்றும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.

Next Story