ஜென் கதை : தாழ்வு மனப்பான்மை


ஜென் கதை : தாழ்வு மனப்பான்மை
x
தினத்தந்தி 28 Feb 2017 1:30 AM GMT (Updated: 27 Feb 2017 12:05 PM GMT)

அந்த இளைஞன் தாழ்வுமனப்பான்மை கொண்டவன். தன்னிடம் உள்ள குறைகளை எண்ணி வருந்துபவன். தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள் நம்மை பார்த்து தான் சிரிக்கிறார்களோ என்று எண்ணுபவன்.

ந்த இளைஞன்  தாழ்வுமனப்பான்மை கொண்டவன். தன்னிடம் உள்ள குறைகளை எண்ணி வருந்துபவன். தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள் நம்மை பார்த்து தான் சிரிக்கிறார்களோ என்று எண்ணுபவன். தான் அழகாய், அறிவுள்ளவனாய் இருந்திருந்தால் ஒரு இளவரசியை மணம் முடித்திருக்கலாமே என்று மனக்கோட்டை கட்டுபவன்.

தன்னுடைய குணம் என்ன என்று அவனுக்கே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனவே ஒரு ஜென் துறவியை சந்திப்பதற்காக சென்றான்.

துறவியிடம், ‘சுவாமி! யார் சிரித்தாலும் எனக்கு கோபம் வருகிறது. எதற்கு என்றே புரியவில்லை’ என்றான்.

அதைக் கேட்ட துறவி, வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

அந்த இளைஞனுக்கோ, துறவி எதற்கு சிரித்தார் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. மூன்று நாட்களாக அதை    நினைத்து தூக்கமே வரவில்லை. ‘துறவி எதற்காக சிரித்தார்?’ என்று எண்ணியபடியே மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போல ஆகிப்போனான்.

மறுநாள் இதுபற்றி துறவியிடமே கேட்டுவிடுவது என்று எண்ணிக்கொண்டான். அதன்படியே துறவியை சந்தித்தான்.

‘சுவாமி! அன்று என்னைப் பார்த்து எதற்காக சிரித்தீர்கள்? நீங்கள் சிரித்ததை எண்ணி என்னால் சரியாக உறங்க முடியவில்லை. மூன்று நாட்களாக சாப்பிடக் கூட இல்லை’ என்று வருத்தத்துடன் கூறினான்.

உடனே துறவி, ‘நீ ஒரு முட்டாள் என்பது இப்போதாவது புரிகிறதா? நீ கோமாளியை விடவும் சிறியவன். அதுதான் உன்னுடைய பிரச்சினை’ என்றார்.

இதைக் கேட்ட அந்த இளைஞன் அதிர்ந்து போனான்.

‘நான் கோமாளியை விடவும் சிறியவன் என்று எந்த காரணத்தை வைத்து சொல்கிறீர்கள்?’ என்று கோபத்துடன் கேட்டான்.

‘கோமாளியாவது பிறர் சிரிப்பதைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் தன்மை கொண்டவன். ஆனால் நீ மற்றவர்கள் சிரிப்பதை எண்ணி வருந்துவதுடன், குழப்பத்திலும் தவிக்கிறாய். இப்போது சொல் நீ கோமாளியை விடவும் சிறியவன்தானே’ என்றார் துறவி.

இதைக் கேட்டதும் அந்த இளைஞனுக்கு தெளிவு ஏற்பட்டது. அந்த தெளிவின் காரணமாக இப்போது அவன் மனம் விட்டு சிரித்தான்.

எது நடந்தாலும், அதனால் விளையும் நன்மையை மட்டுமே எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். அதுதான் மன அமைதியையும் சந்தோ‌ஷத்தையும் பெற்றுத் தரும்.

Next Story