கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா திரளான பக்தர்கள் வழிபாடு


கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா திரளான பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 25 July 2017 11:39 PM GMT (Updated: 25 July 2017 11:39 PM GMT)

சேலத்தில் ஆடிப்பண்டிகையையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். சேலத்தில் எட்டு பேட்டைகளையும் கட்டியாளும் அம்மனாக கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இந்தநிலையில் இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் பாலாலயம் செய்யப்பட்ட கோட்டை மாரியம்மன் உற்சவருக்கு ஆடிப்பண்டிகை நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

கடந்த ஆண்டு ஆடிப்பண்டிகை நடைபெற்ற சில நிகழ்ச்சிகள் இந்தாண்டு பண்டிகையில் கிடையாது. இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கிச்சிப்பாளையம் பஜனை மடம் வீதியில் தொடங்கிய பூக்கூடை ஊர்வலத்தில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் சன்னியாசிக்குண்டு மெயின்ரோடு, கல்லாங்குத்து மெயின்ரோடு, டவுன் போலீஸ் நிலையம் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் உற்சவர் மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்கள் பலர் தாங்கள் கொண்டு வந்த பூக்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

பூச்சாட்டுதல் விழாவில் சக்திவேல் எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் மாலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் உற்சவத்தை தொடர்ந்து சேலம் குகை மாரியம்மன்–காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி கேட் சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்னமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் உள்பட 8 பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதல் உற்சவத்துடன் ஆடிப்பண்டிகை தொடங்கியது.

கோட்டை மாரியம்மன் கோவிலில் வருகிற 7–ந் தேதி சக்தி அழைப்பும், 9, 10 மற்றும் 11–ந் தேதிகளில் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 15–ந் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.


Next Story