கைரேகை அற்புதங்கள் : காதல் திருமணம் யாருக்கு?


கைரேகை அற்புதங்கள் : காதல் திருமணம் யாருக்கு?
x
தினத்தந்தி 27 April 2018 1:00 AM GMT (Updated: 26 April 2018 8:15 AM GMT)

காதல் திருமணம் செய்துவிட்டு, சந்தோஷமாக குடும்பம் நடத்துபவர்களும் உண்டு. நரக வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் உண்டு.

காதலில் தாங்கள் போட்ட கணக்கு, கல்யாணத்திற்குப் பிறகு தவறாகிப்போனதை நினைத்து வருந்தும் ஆண்களும், பெண்களும் ஏராளம். காதலிக்கும் போது நல்லவனாகத் தெரிந்தவன், கல்யாணம் முடிந்து கணவனானதும் தவறான பாதைக்கு மாறியதை நினைத்து வருந்தும் பெண்களின் எண்ணிக்கையும் ஏராளம்.

ஒருவருக்கு காதல் திருமணம் நடைபெற வழிவகுக்கும் கிரகம் ராகுவும், கேதுவும் தான். ஒருவர் ஜாதகத்தில் திருமண வீடான களத்திரஸ்தானத்தில் ராகு அமையப்பெற்றால், அநேகமாக அந்த ஜாதகர் காதல் திருமணம்தான் செய்வார். அதே போல் 7-ம் வீடான திருமண வீட்டில் கேது அமைந்திருந்தால், அந்த ஜாதகர் தான் சார்ந்த இனத்தை விட்டு, வேறு இனத்தைச் சேர்ந்த பெண்ணை கைபிடிக்கும் வாய்ப்பு அதிகம்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்ரனும், சூரியனும் பரிவர்த்தனை அடைந்திருந்து, 7-ம் வீட்டு அதிபதி (திருமண வீட்டின் அதிபதி), 5-ம் வீட்டில் வலுவுடன் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் காதல் திருமணம் செய்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். மேற்கண்ட அமைப்பு உள்ள ஜாதகர்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், அந்த காதலர்கள் எதிர்ப்பை முறியடித்து திருமணம் செய்வார்கள். பின்விளைவுகளை அவர்கள் யோசிக்க மாட்டார்கள். பொதுவாக காதலர்கள் திரு மணம் செய்யும் முன் விட்டுக்கொடுத்துப் போவது பற்றி பேசி முடிவெடுப்பதே நல்லது.

‘வாதமும், திருமணமும் தனக்கு சமமானவர்களுடன் தான் செய்ய வேண்டும்’ என்று  முன்னோர்களும், பெரியவர்களும் கூறிய அறிவுரையை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனி கைரேகைப்படி காதல் திருமணம் செய்யும் ஆண் மற்றும் பெண் களைப் பற்றி பார்க்கலாம். ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. சுக்ர மேடு அமைந்த ஜாதர்களுக்கு நல்ல திருமண வாழ்வு அமைவது உறுதி. சுக்ர மேடு பள்ளமாக, உப்பலின்றி அமைந்திருந்தால் அந்த நபர்களின் காதல் நிறைவேறாது என்கிறது கைரேகை சாஸ்திரம். அந்த நபரின் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். சுக்ர மேட்டில் மரு இருந்தால், ரகசிய உறுப்பில் நோய் உண்டாகலாம். பெண்ணின் கையில் சுக்ர மேடு மிகவும் உப்பலாக, அளவுக்கு மீறி இருந்தால் அந்தப் பெண் வழிதவறிச் செல்வதற்கு காதலனே வற்புறுத்த இடமுண்டு. திருமண ரேகையின் கிளை, சூரிய மேடு வரை  சென்று, ஒரு நட்சத்திரக் குறியை உண்டாக்கினால் அந்த நபர் பிரசித்திப் பெற்ற ஒரு வரைக் காதலிப்பார். அவர்கள் காதல் வெற்றியும் பெறும். திருமண ரேகை, புதன் ரேகைக்கு மிக அருகில் அமைந்தால் அந்த நபருக்கு நிச்சயம் காதல் திருமணம் தான்.

-கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Next Story