தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய பாம்பு


தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய பாம்பு
x
தினத்தந்தி 29 April 2018 11:00 PM GMT (Updated: 29 April 2018 8:22 PM GMT)

சித்ரா பவுர்ணமியையொட்டி தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது படமெடுத்து பாம்பு ஆடியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

பாபநாசம்,

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தெற்கு வீதி மெயின்ரோடு சாலையில் தங்கமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சித்ராபவுர்ணமி திருவிழா நடைபெற்றது. விழாவில் காலையில் சக்தி கரகம், பால்குடம் மற்றும் காவடி புறப்பாடும், மதியம் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கஞ்சிவார்த்தலும், அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலில் தங்கமுத்து மாரியம்மன் பின்புறம் உள்ள சமயபுரம் மாரியம்மன் சாமி சிலையில் ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது. அம்மன் சிலையின் தலை மீது ஏறி கொண்டு சில வினாடிகள் பாம்பு படமெடுத்து ஆடியது.

பின்னர் அம்மன் தலைமீது இருந்த 5 தலை பாம்பு அருகில் நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது. சித்ராபவுர்ணமி பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் நல்லபாம்பு அம்மன் சிலை மீது ஏறி நின்ற காட்சி அப்பகுதி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து பாம்பு அம்மன் சிலை மீது ஏறி நின்ற காட்சியை பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்களது செல்போனிலும் இந்த காட்சியை படம் பிடித்தனர். அம்மன் சிலை மீது நல்லபாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story