வீட்டில் செல்வம் தங்குவதற்கு வித்திடும் விஷயங்கள்


வீட்டில் செல்வம் தங்குவதற்கு வித்திடும் விஷயங்கள்
x
தினத்தந்தி 7 Sep 2018 7:00 AM GMT (Updated: 7 Sep 2018 7:00 AM GMT)

இல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். பணப்பிரச்சினையும் ஏற்படாது. அதற்கு 10 எளிய வாஸ்து குறிப்புகள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்...

1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை

சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர் பொறித்த பலகையை வீட்டில் வாசலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.

2. ஒளிபிறந்தால் ஓடோடி வரும் செல்வம்

வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை, மாலை விளக்கேற்றி வைப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.

3. மங்களம் தரும் சின்னங்கள்

மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம் போன்ற சின்னங்களை பூஜை அறையிலும், பிரதான அறையிலும் இடம்பெற செய்ய வேண்டும். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.

4. கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை

சனிக்கிழமைதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சை பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். வாரந்தோறும் பூஜித்து புதிய பழத்தை பூஜையில் இடம்பெற செய்துவர வேண்டும். இப்படி செய்தால் உங்கள் இல்லத்தையும், உங்கள் குடும்பத்தாரையும் விட்டு கண் திருஷ்டி விலகும்.

5. பூஜை அறையில் கங்கை நீர்

புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம் உண்டாகும்.

6. தீயசக்திகளை துரத்தும் உப்பு

வீட்டு அறையின் மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிரப்பி வைக்க வேண்டும். தீய சக்திகளை அறவே கிரகித்து நீக்கும் தன்மை உப்புக்கு இருக்கிறது.

7. சரியான திசையில் சமையலறை

வாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையல் அறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கிறோமா? என்பதை உறுதி செய்யுங்கள்.

8. சமையல் அறையில் மருந்துகள் வைக்கக்கூடாது

சமையல் பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் சமையல் அறையில் வைக்கக்கூடாது. குறிப்பாக ஆரோக்கியத்திற்கு இடமளிக்கும் சமையல் அறையில் நோய் நிவாரணிகளான மருந்துகளை ஒருபோதும் வைக்கக்கூடாது.

9. படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடாது

படுக்கை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கக்கூடாது. சிலர் வீட்டின் படுக்கை அறையில் டிரஸ்ஸிங் டேபிள் அமைந்திருக்கும். அப்படி இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிட வேண்டும். வாஸ்துப்படி படுக்கை அறையில் உள்ள கண்ணாடி பிணியையும், குடும்பத்தில் சச்சரவையும் வரவழைக்கும்.

10. அமைதியைத் தூண்டும் மணியோசை

மணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் அவை தீய சக்திகளை தவிடு பொடியாக்கிவிடும். எப்போதும் காற்றில் நல்ல சக்தியை பரப்பும் தன்மை இந்த மணிகளுக்கு உண்டு.

ஒருசில விஷயங்களை தவறாக கடைப்பிடிக்கும்போது
அது பண பிரச்சினைக்கு வழிவகுக்கும்...

* ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சினைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள், பண பிரச்சினை அதிகரிக்கும்.

* ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சினையால் விரைவில் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது.

* அளவுக்கு அதிகமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.

* வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து விட்டால், அந்த குடும்பத்தினர் பணக்கஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

* ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவருடைய சேமிப்பு பணம் கரையத் தொடங்கும் என்பதற்கான அறிகுறியாகும்.

* வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சினையை ஏற்படுத்தும்.

* ஒருவர் நகைகளை ஏதாவது ஒரு வகையில் இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் தேடும் நிலை ஏற்பட்டாலோ அது பெரிய பண இழப்பை ஏற்படுத்த போவதாக அர்த்தம்.

புதுக்குடித்தனம் போகக்கூடாத மாதங்கள்

புதிய வீட்டிற்கு குடித்தனம் போகக்கூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த மாதத்தை பற்றியும், அந்த மாதத்தில் ஏன் குடியேறக்கூடாது? என்பதற்கான காரணத்தையும் பார்க்கலாம்....

* புதிய வீட்டிற்கு குடித்தனம் போகக் கூடாத மாதங்கள்: ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி. ஏனெனில் ராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது. பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது. இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது. பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம். மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது. மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது. ஆகையால் இந்த மாதங்களில் புது வீடு அல்லது வாடகை வீட்டுக்கு குடியேறினால் அந்த குடும்பம் துன்பமும், துயரமும் அடையும் என்பது நம்பிக்கை.

-கடகம் ராமசாமி

Next Story