ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதசுவாமி கோவில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதசுவாமி கோவில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 8:35 PM GMT)

ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதசுவாமி கோவில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகரை தேரில் எழுந்தருள செய்தனர். தேர் சக்கரத்தில் முக்கிய பிரமுகர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஆவுடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள், ‘ஆத்மநாதா, மாணிக்கவாசகா’ என்று பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது.

தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் சுந்தரமூர்த்தி தம்பிரான், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(சனிக்கிழமை) 10-வது நாள் விழாவில் வெள்ளி ரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு உபதேசித்து அருளிய உபதேச காட்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆத்மநாதசுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர். கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தெட்சிணாமூர்த்தி தலைமையில் ஆவுடையார்கோவில் போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story