ருத்ராட்சமும்.. பயன்களும்..


ருத்ராட்சமும்.. பயன்களும்..
x
தினத்தந்தி 19 March 2019 7:43 AM GMT (Updated: 19 March 2019 7:43 AM GMT)

சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள், தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவ சின்னம் ‘ருத்ராட்சம்.’

‘ருத்திரன்’ என்பது சிவபெருமானையும், ‘அட்சம்’ என்பது கண்களையும் குறிப்பதாகும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளே ‘ருத்ராட்சம்’ என்று கூறப்படுகிறது. ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இன்னும் சில ருத்ராட்சங்களைப் பற்றி இந்த வாரத்தில் பார்க்கலாம்.

பதினொரு முகம்

இந்த ருத்ராட்சமானது, வாயு புத்திரர் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்றது.

இதில் ஏகாதச ருத்திரர்கள் வசிக்கிறார்கள் என்று சிவபெருமானே கூறியிருப்பதாக கந்தபுராணம் தெரிவிக்கிறது.

யோகிகள் பதினொரு முக ருத்ராட்சத்தை உச்சந்தலையில் அணிகிறார்கள். இதற்கு ஆதிக்க கிரகம் இல்லை.

தியானம், யோகத்தில் ஈடுபடுபவர்கள் இதனை மாலையாக உபயோகப்படுத்தினால் சிறப்பான பலன் கிடைக்கும்.

இந்த ருத்ராட்சத்தை அணிந்தாலோ அல்லது பூஜை அறையில் வைத்து பூஜித்தாலோ, அசுவமேத யாகம் செய்த பலன் வந்து சேரும்.

வியாபாரம் சிறப்பாக அமைய, இந்த ருத்ராட்சத்தை அணியலாம்.

பன்னிரண்டு முகம்

பன்னிரண்டு முக ருத்ராட்சம், துவாதச ஆதித்யர்களின் ஆதிக்கம் பெற்றது.

ஒரு முக ருத்ராட்சத்தை போன்று, இந்த ருத்ராட்சத்திற்கு சூரியனின் ஆதிக்கம் உள்ளது.

மகாவிஷ்ணுவின் அருளை பெற்ற ருத்ராட்சம் இது என்று பத்மபுராணம் கூறுகிறது.

உடல், மன வலிமையை தரும் இந்த ருத்ராட்சத்தை, அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் அணிந்தால் தலைமைப் பதவி வந்து சேரும்.

செல்வம், மகிழ்ச்சி உண்டாகும். வாழ்வில் வறுமையே வராது.

பதிமூன்று முகம்

காமதேவன், இந்திரன், மகாலட்சுமி, முருகன் ஆகியோரின் அருளை பெற்ற இந்த ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிது.

இதை அணிபவர்களுக்கு சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

குரு, தாய், தந்தை, சகோதரியை கொன்ற பாவத்தை விலக்கும்.

மகாலட்சுமியின் ஆதிக்கம் இருப்பதால் இதை அணிந்தால், செல்வ வளம் பெருகும்.

இந்த ருத்ராட்சத்தை மாலையாக வைத்து மந்திரம் ஜெபித்தால் சித்தர்களின் அருள் கிடைக்கும்.

பதினான்கு முகம்

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து நேரடியாக தோன்றியது என்ற சிறப்புக்குரியது. எனவே இது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அனுமனின் அருளை பெற்றது என்பதால், சனிக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதை மாலையாக அணிந்தால் சனி தோஷம் விலகும்.

பல மனிதர்களை வழி நடத்தும் பதவியில் இருப்பவர்கள், இதை அணிந்தால் மிகுந்த பலனை கொடுக்கும்.

இந்த ருத்ராட்சத்திற்கு மருத்துவ சக்தி உள்ளது.

பதினைந்து முகம்

இந்த ருத்ராட்சம் சிவபெருமானின் பசுபதி அம்சம் நிறைந்தது.

இதை அணிவதாலோ, பூஜிப்பதாலோ இவ்வுலக வாழ்வில் பல நற்பயன்களை பெறலாம்.

ஆன்மிகம், யோகம், ஞானம் இவற்றில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம்.

செல்வம் நிலைக்க இந்த ருத்ராட்சத்தை ஜெப மாலையாக வைத்து, மகாலட்சுமி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

பதினேழு முகம்

விஸ்வகர்மாவின் அம்சமாக கருதப்படும் ருத்ராட்சம் இது.

இதை அணிபவர்களும், பூஜிப்பவர்களும் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வத்தை அடைவர்.

காத்யாயினி யந்திரத்தின் படி, இந்த ருத்ராட்சம் காத்யாயினி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது.

பெண்கள் இந்த மணியை அணிந்தால் சிறந்த கணவன், சிறந்த குழந்தைகள், சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும்.

இந்த ருத்ராட்சத்தை மாலையாக அணிந்தவர்களுக்கு, தர்மம், அர்த்தம், காமம், வீடு போன்ற நான்கு நிலைகளிலும் நற்பலன்கள் உண்டாகும்.

பதினெட்டு முகம்

இந்த ருத்ராட்சம் பூமா தேவியின் அம்சமாக கருதப்படுகிறது.

இதனை ஜெபமாலையாக அணிந்து காயத்ரி மந்திரம் சொல்லி வந்தால், ஆன்மிகத்தில் பெரிய முன்னேற்றம் காணலாம்.

கருச்சிதைவு அடிக்கடி ஏற்படும் பெண்கள், கர்ப்பம் நிலைக்க கர்ப்பம் தரித்தவுடன் இந்த மாலையை கழுத்தில் அணிய வேண்டும்.

இந்த ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு சகல வளமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்.

பத்தொன்பது முகம்

நாராயணனின் ஆதிக்கத்தை பெற்ற ருத்ராட்சம் இது.

முதல் 10 முக ருத்ராட்சத்தின் பலன்களும், இந்த ருத்ராட்சத்தை அணிவதால் கிடைக்கும்.

வியாபாரம், அரசியல், பொதுசேவை எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.

இந்த ருத்ராட்சம் அணிந்தாலோ, அதை வைத்து பூஜித்தாலோ சிரமம் இல்லாத வாழ்வு அமையும்.

இருபது முகம்

நவக்கிரகங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள், மும்மூர்த்திகள் ஆகியோரின் அருளை பெற்றது.

அதோடு பிரம்மதேவனின் சொரூபத்தை கொண்டது இந்த ருத்ராட்சம்.

இது கிடைப்பது மிக, மிக அரிது. அவ்வாறு கிடைக்க பெற்றால், இதை அணியும் போதும், பூஜை செய்யும் போதும் பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இருபத்தொரு முகம்

இது குபேர அம்சத்தை கொண்டது.

இதனை அணிபவர்களுக்கும், பூஜை செய்பவர்களுக்கும் செல்வ வளம் கிடைக்கும்.

இதை அணிந்திருப்பவர்களை, யந்திர, தந்திரங்கள் எதுவும் நெருங்காது.

அந்த ருத்ராட்சம் அணிந்தவர்கள், சட்ட சிக்கல்களை மிக சுலபமாக தீர்த்துக்கொள்வர்.

இது பார்க்க பெரிதாக இருக்கும். இந்த ருத்ராட்சமும் கிடைப்பது மிகவும் அரிது.

நாடி ஜோதிடர் பாஸ்கர், வடவள்ளி

Next Story