ஜப்பானில் சரஸ்வதி


ஜப்பானில் சரஸ்வதி
x
தினத்தந்தி 12 Oct 2021 6:19 AM GMT (Updated: 12 Oct 2021 6:19 AM GMT)

இந்து மத சிந்தனைகளும், ஆன்மிக கருத்துக்களும், கடல்கடந்தும் பல நாட்டு மக்களை கவர்ந்தவை. இந்து மதத்தில் உள்ள சில வழிபாட்டு முறைகள், சிறு மாறுதல்களுடன், பிற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருவதை இன்றும் நாம் காண முடியும்.

அந்த வகையில் நாம் செய்யும் சரஸ்வதி வழிபாடு, ஜப்பான் நாட்டிலும் சிறு வித்தியாசங்களுடன் நடைபெற்று வருவதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின்படி சூரிய குலத்தில் தோன்றிய ‘யமாடோ’ வம்ச சக்கரவர்த்திகள் ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில்தான், முன்னோர்கள் மற்றும் இயற்கை வழிபாடுகள், சடங்குகள் அதிகம் நிறைந்த ஷிண்டோ மதமும், புத்த மதமும் பரவின.

இந்த இரண்டு மதங்கள் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால், ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அந்நாட்டு ஆன்மிக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ஆறாம் நூற்றாண்டுக்கும், எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் சரஸ்வதி வழிபாடு, ஜப்பானில் பரவி இருக்கிறது.

ஜப்பானில் வணங்கப்படும் 7 அதிர்ஷ்ட தேவதைகளில், சரஸ்வதியும் ஒருவர். ‘பென்சைட்டென்’ -இதுதான் அங்கு சரஸ்வதியின் பெயர். ஜப்பானிய மொழியில் ‘பென்தென்’ என்பது பிரம்மாவைக் குறிக்கும். ‘பென்சைட்டென்’ சக்தி மிக்க தெய்வமாகவும், ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.

அதற்கு காரணம், ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. அதைக் காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்பதாக அவர்களது நம்பிக்கை. மேலும், இனிமையான குரல், அதிர்ஷ்டம், அழகு, மகிழ்ச்சி, ஞானம், சக்தியை அருளும் தெய்வமாகவும் அவள் போற்றப்படுகிறாள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் நமது நாட்டில் மதிக்கப்படுவதைப்போல, ஜப்பானிலும் நீர்நிலைகள், குளங்கள் ஆகியவற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள். ஜப்பான் மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது, ‘பென்சைட்டனை’ வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ‘ஷோட்டன்’ எனவும், கருடன் ‘கருரா’ எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும், வாயு, வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கும் ஜப்பானில் சிலைகள் உள்ளன.

சரஸ்வதிதேவி, விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை அழித்ததாக, ரிக் வேதத்தில் தகவல் உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார். டோக்கியோ நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட, ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன.

வழிபாட்டு முறை
கல்விக் கடவுளான சரஸ்வதி, புத்த மதத்தில் ஞானம் அருளும் பெண் தெய்வமாக வழிபடப்படுகிறார். இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்ட சரஸ்வதி வழிபாட்டை இன்றும் அங்குள்ள மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே, ஜப்பானிய பென்சைட்டெனும், தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறார். அந்த நாட்டு மக்கள் அனைவரும் அவரது பிள்ளைகள் என்ற நிலையில், கல்வி, கலைகளில் சிறக்கவும், முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்குச் சென்று மக்கள் வழிபடுகின்றனர். ஜப்பான் பாரம்பரிய விழாக்களில் ‘பென்சைட்டென்’ தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து வணங்குகிறார்கள்.


Next Story