நிலப் பிரச்சினையை தீர்க்கும் பூமி வராகப்பெருமாள்


நிலப் பிரச்சினையை தீர்க்கும் பூமி வராகப்பெருமாள்
x
தினத்தந்தி 4 Dec 2021 12:19 PM GMT (Updated: 4 Dec 2021 12:19 PM GMT)

பூமி வராகப் பெருமாள் உருவப் படத்தை, வீட்டில் மாட்டி வைத்தால், சொந்த நிலம், வீடு வாங்கும் யோகம் தானாக உங்களை தேடி வரும்.

இரண்யாட்சன் என்னும் அசுரன், ஒரு முறை இந்த பூமியை எடுத்து போய், கடலின் அடியில் ஒளித்து வைத்தான். அப்போது தேவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திருமால் வராக அவதாரம் எடுத்தார். அவர், இரண்யாட்சனை கொன்று, கடலுக்கு அடியில் இருந்த பூமியை தன்னுடைய இரண்டு பற்களுக்கு இடையே வைத்து வெளிக்கொண்டு வந்தார். இந்த தோற்றத்தையே, ‘பூமி வராகப் பெருமாள்’ என்று வழிபடுகிறோம்.

இந்த பூமி வராகப் பெருமாள் உருவப் படத்தை, வீட்டில் மாட்டி வைத்தால், சொந்த நிலம், வீடு வாங்கும் யோகம் தானாக உங்களை தேடி வரும்.

ஒரு அடி நிலம் கூட வாங்க முடியாதவர்கள், வாங்கிய நிலத்தில் பிரச்சினை இருப்பவர்கள், சொந்த நிலம் வாங்கியும் வீடு கட்டும் யோகம் வாய்க்காதவர்கள், நிலம் சம்பந்தப்பட்ட தொழிலை செய்து வருபவர்கள் அதில் வெற்றி பெற என்று, நிலம் தொடர்பான அனைத்தும் சிறப்பாக நடைபெற இந்த பூமி வராகப் பெருமாளை வழிபட்டு வரலாம். தொழில் நஷ்டத்தில் செல்பவர்கள், நிலத்தை உழுது விவசாயம் செய்பவர்கள் கூட இந்த இறைவனை வழிபாடு செய்து வந்தால், பிரச்சினைகள் அகன்று, இன்ப வாழ்வு மலரும் என்பது நம்பிக்கை.

மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்தும் அகன்று, வாழ்வில் இன்பம் வர, வீட்டில் பூமி வராகர் திரு உருவப்படத்தையும், திருமால் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருவுருவ படத்தையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். இந்த இரண்டு படங்களை வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் நிகழும்.

வழிபடும் முறை

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறைக்கு வந்து, நீங்கள் வைத்திருக்கும் பூமி வராகப் பெருமாள், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாக இரண்டு குபேர விளக்கு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரிபோட்டு, அந்த எண்ணெயில், ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு அதன் பின்பு, தீபம் ஏற்றி பெருமாளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதை இறைவனிடம் முறையிட்டபடி, இந்த வழிபாட்டினை செய்து வந்தால், நிலம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும்.

சிலபேர் நிலம் வாங்குவதற்காக, வீடு வாங்குவதற்காக நிறைய கடனை வாங்கிவிட்டு அவதிப்பட்டு வருவார்கள். இப் படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களும் இந்தப் பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து தினமும் வழிபாடு செய்து வந்தால், கடன் சுமை படிப்படியாகக் குறையத் தொடங்கும். விவசாயம் செய்பவர்கள் தினம்தோறும் இந்த பெருமாளை வழிபாடு செய்தால் விவசாயத்தில் அமோகமான லாபத்தை பெறலாம். இப்படி நிலம் தொடர்பான எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதில் சுமுக நிலை ஏற்பட பூமி வராகப் பெருமாளை வணங்குங்கள்.

Next Story