நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை
நாமக்கல் நரசிம்மசாமி கோவில் உண்டியலில் ரூ.25 லட்சம் காணிக்கை இருந்தது.
நாமக்கல் நரசிம்மசாமி கோவில் உண்டியலில் ரூ.25 லட்சம் காணிக்கை இருந்தது.
உண்டியல் திறப்பு
நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் உள்ளது. ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் நரசிம்மரை வழிபடுவது வழக்கம். எனவே தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.
இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை 6 மாதம் அல்லது 9 மாதங்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்படும்.
ரூ.25 லட்சம் காணிக்கை
அந்த வகையில் நேற்று ஈரோடு துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) ரமேஷ், கோவில் உதவி ஆணையாளர் இளையராஜா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சாந்தி, சுந்தர் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் மூலம் காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ரூ.25 லட்சத்து 10 ஆயிரத்து 664, 106 கிராம் தங்கம், 270 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி நரசிம்மசாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டபோது ரூ.2 லட்சத்து ஆயிரத்து 647, 15 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.