வங்கி சேவைக்கு கட்டணமா?


வங்கி சேவைக்கு கட்டணமா?
x
தினத்தந்தி 14 Jun 2018 9:30 PM GMT (Updated: 14 Jun 2018 12:58 PM GMT)

வங்கிகள் என்பது பொதுமக்களின் சேமிப்பு பணத்தை பாதுகாக்கவும், அவர்கள் விரும்பும்போது பணத்தை போடவும், வேண்டியநேரத்தில் திரும்ப எடுக்கவும் வகைசெய்யும் ஒரு அமைப்பாகும்.

ங்கிகள் என்பது பொதுமக்களின் சேமிப்பு பணத்தை பாதுகாக்கவும், அவர்கள் விரும்பும்போது பணத்தை போடவும், வேண்டியநேரத்தில் திரும்ப எடுக்கவும் வகைசெய்யும் ஒரு அமைப்பாகும். பொதுமக்களின் சேமிப்பை பாதுகாப்பதோடு அதன் கடமை முடிந்துவிடுவதில்லை. விவசாயிகள், வியாபாரிகள், தொழில்முனைவோர் ஆகியோர்களின் அன்றாட வரவு–செலவுகளை பாதுகாப்பாக நடத்துவதற்கும் பயன்படுகிறது. பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில்அதிபர்கள் போட்டுவைக்கும் பணத்தை கொண்டுதான், மீண்டும் கல்விக்கடனாக, நகைக்கடனாக, விவசாயகடனாக, வாகனகடனாக, தொழில் தொடங்கும் கடனாக, தனிநபர் கடனாக என்று வழங்கி வட்டியோடு திரும்ப பெறுகிறது. ஆக, பொதுமக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு, மீண்டும் அவர்களில் தேவைப்பட்டவர்களுக்கு கடனாக வழங்கிக்கொண்டே இந்த சேவைகளை வங்கிகள் செய்கிறது. 2014–ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும்போது, ‘இந்தியாவில் 80 சதவீத குடும்பங்களில் செல்போன்கள் இருக்கின்றன, ஆனால் வங்கிக்கணக்கு இல்லை’ என்று பேசியிருக்கிறார். அதன் காரணமாகத்தான் ‘ஜன்தன் யோஜனா’ என்ற அனைவருக்கும் வங்கிகணக்கு திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் ஏறத்தாழ இப்போது 10 கோடிபேர் புதிய வங்கி கணக்கை தொடங்கியிருக்கிறார்கள்.

வங்கிகளில் சேமிப்புகணக்குக்கு இலவசமாக ‘செக்புக்’ வழங்கப்படுகிறது. இதுதவிர, கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்., மையங்களில் இருந்து பணம் எடுத்தால் மாதம் 5 முறையும், பிற வங்கிகளின் ஏ.டி.எம்.–ல் இருந்து பணம் எடுத்தால் மாதம் 3 முறையும் இலவசமாக இந்த சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கு 2012–ம் ஆண்டு முதல் சேவைவரி, அதுமட்டுமல்லாமல் அதற்கு 18 சதவீத வட்டி, 100 சதவீத அபராதமும் சேர்த்து தற்போது செலுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியின் டைரக்டர் ஜெனரல் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சேவை கட்டணமே வசூலிக்காத ஏ.டி.எம். பணப்பரிமாற்றத்திற்கும், டெபிட் கார்டு பயன்பாடு போன்ற சேவைகளுக்கு பணம் வசூலிப்பது என்றால் எப்படி வாடிக்கையாளர்களை தேடிப்பிடித்து வங்கிகள் வசூலிக்க முடியும்? வசூலிக்காத சேவைகளுக்கு வரியையும், அபராதமும் விதிக்க சொல்லும் சூழ்நிலையில், இனிமேல் இந்த சேவைகளுக்கெல்லாம் கட்டணம் வசூலிப்பது குறித்து நிச்சயமாக வங்கிகள் பரிசீலிக்கும். இவ்வாறு ஒவ்வொரு சேவைக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வங்கிகள் முற்பட்டால் நிச்சயமாக வங்கிகள் மீது பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கையும், பிடிப்பும் இல்லாமல் போய்விடும். ஏற்கனவே வங்கிகளில் பொதுமக்கள் செய்யும் டெபாசிட்டுகளுக்கு குறைந்தளவுதான் வட்டி கிடைக்கிறது. குறைந்த வட்டியோடு கட்டணமும் வசூலித்தால் வங்கியில் பணம்போடுவதால் எந்தவித பயனும் இல்லை. எனவே மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும், மத்திய நிர்வாகங்களும் வாடிக்கையாளர்கள்மீது இத்தகைய சுமையை ஏற்றக்கூடாது. உடனடியாக இதை திரும்பப்பெற வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வங்கிகளில் தொடர்ந்து சேவைபெறும் வகையில் வங்கிகொள்கையையே மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கையை உடனடியாக மத்திய அரசாங்கம் பரிசீலித்து, வங்கி சேவைகள் எப்போதும்போல தொடர்ந்து கட்டணமில்லா சேவைகளாகவே இருக்க வேண்டும்.

Next Story