வருமானவரி கட்டுபவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரா?


வருமானவரி கட்டுபவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரா?
x
தினத்தந்தி 16 Jan 2019 10:30 PM GMT (Updated: 16 Jan 2019 1:36 PM GMT)

கடந்த வாரத்தில் மத்திய அரசாங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பொதுப்பிரிவினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றி, இப்போது ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டமாகவும் ஆகிவிட்டது.

டந்த வாரத்தில் மத்திய அரசாங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பொதுப்பிரிவினருக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றி, இப்போது ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டமாகவும் ஆகிவிட்டது. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசாங்கத்தில் 15 சதவீத இடஒதுக்கீடும், மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், ஆக மொத்தம் 49.5 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது வருமானத்தை மட்டும் அடிப்படையாக வைத்து வழங்கப்படுவதில்லை. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது என்று அறிவித்திருந்தாலும், பொதுப்பட்டியலில் அதாவது உயர் சாதியினர் அடங்கிய பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக இப்போது 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதியாக ஆண்டுக்கு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் மாதவருமானம் ரூ.66,666 பெறுகிறவர்களெல்லாம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராகவே கருதப்படுகிறார்கள். நமது மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 95 சதவீத மக்களாவது இந்த பட்டியலில்தான் வருவார்கள். இதுதவிர, 5 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்பவர்களும் இந்த இடஒதுக்கீட்டின் பலனை அடைய தகுதியுடையவர்கள் ஆவார்கள். மக்கள்தொகையில் 86 சதவீதம் பேர் இந்தக் கணக்கில்தான் இருக்கிறார்கள். மேலும், 1,000 சதுரடிக்கு குறைவான வீடு வைத்திருப்பவர்களும் இந்த இட ஒதுக்கீட்டின் பயனை அடைவார்கள். இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில், குறைந்தது 80 சதவீத வீடுகள், 500 சதுரடிக்கும் கீழான வீடுகள்தான். இந்த இடஒதுக்கீட்டு கணக்குப்படி, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்றால், இதில் பெரும்பாலானவர்கள் வருமான வரி கட்டுபவர்களாகத்தான் இருப்பார்கள். 

ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம்வரை உள்ளவர்கள் 5 சதவீதம் வருமான வரி கட்டவேண்டும். ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம்வரை வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதம் வருமான வரி கட்டவேண்டும். ஆக, 20 சதவீத வரி கட்டுபவர்கள் எல்லோரும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராக கருதப்பட்டு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி மற்றும் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராகவும், ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம்வரை வருமானம் உள்ளவர்கள் குறைந்த வருவாய் பிரிவினராகவும் கருதப்படுகிறார்கள். தமிழக முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பலனை அடைபவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரமாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் எந்த நலத்திட்டத்தின் பலனை அடைவதற்கும் குறைந்தபட்ச ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சம் கிடையாது. ஆனால், மத்திய அரசாங்கத்தில் இப்போது ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராக கருதப்பட்டு, இடஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் என்றால், வருமானவரி செலுத்துபவர்கள் உள்பட மத்திய–மாநில அரசுகளின் அனைத்து நலஉதவி திட்டங்களிலும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்தான் தகுதிக்கு அடிப்படையாக கருதப்படுமா? என்பதுதான் மக்களிடம் இப்போது உள்ள கேள்வி.

Next Story