அமெரிக்காவில் சலுகை தொடரவேண்டும்


அமெரிக்காவில் சலுகை தொடரவேண்டும்
x
தினத்தந்தி 7 March 2019 10:00 PM GMT (Updated: 7 March 2019 2:15 PM GMT)

வெளிநாடுகளோடு வைத்திருக்கும் நல்லுறவு, நல்லெண்ணத்தை வளர்க்கும்.

ஐக்கியநாடு சபை போன்ற சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு ஆதரவாக அந்த நாடுகளின் நடவடிக்கைகள் பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு வலிமையைக்கூட்டும். இதுபோல, வெளிநாடுகளோடு வைத்திருக்கும் வர்த்தக உறவு நாட்டின் உற்பத்தியை பெருக்கும். வர்த்தகத்தை தழைக்கச்செய்யும். அன்னிய செலாவணியை பெருக்க உதவும். வெளிநாடுகளுக்கு நாம் மேற்கொள்ளும் ஏற்றுமதியின் அளவு இறக்குமதியைவிட அதிகமாக இருந்தால், அன்னிய செலாவணி கையிருப்பு அதிக அளவில் உயரும். அந்த அளவில் இந்தியா–அமெரிக்கா இடையே இருக்கும் வர்த்தகத்தை எடுத்துக்கொண்டால், நாம் அமெரிக்காவில் இருந்து செய்யும் இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்க ஏற்றுமதி மட்டும் 15.8 சதவீதமாகும்.

2017–18–ம்ஆண்டை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் இருந்து 4 ஆயிரத்து 788 கோடி டாலர் (நேற்று ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ.70.03 ஆகும்) மதிப்பிலான பொருட்களின் ஏற்றுமதி நடந்து இருக்கிறது. அதே ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான பொருட்களின் மதிப்பு 2 ஆயிரத்து 661 கோடி டாலர்தான். இந்தநிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, எந்தெந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதியைவிட அதிகமாக இருக்கிறது. அதாவது வர்த்தக பற்றாக்குறை இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றவகையில் நடவடிக்கை எடுக்க முனைப்புடன் செயல்படுகிறார். இதற்காக இறக்குமதி வரிகளையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த சனிக்கிழமை மேரிலேண்ட் நகரில் ஒரு மாநாட்டில் பேசும்போது, ‘அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஹார்லே–டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்யும்போது, இந்தியாவில் 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. நான் 2 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இது 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதேநேரம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்யும்போது 2.4 சதவீதம் வரிதான் விதிக்கப்பட்டு வந்தது. இதை நான் 25 சதவீதமாக உயர்த்தப்போகிறேன்’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1,784 பொருட்களுக்கு இதுவரை வரியில்லாமல் அமெரிக்காவில் இந்திய வர்த்தகர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அளிக்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி. என்று கூறப்படும் வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சலுகையின்கீழ் கடந்த 2017–18–ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 560 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனால் 19 கோடி டாலர் ஏற்றுமதியாளர்களுக்கு பலனாக கிடைத்தது.

மொத்தம் 120 நாடுகளுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டு வரும்நிலையில், இந்தியாவுக்கு ரத்து செய்யப்படுவது நிச்சயமாக பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். 1,784 பொருட்களின் விலை உயர்வால் ஏற்றுமதி நிச்சயம் வெகுவாக குறையும். எனவே, மத்திய அரசாங்கம் உடனடியாக அமெரிக்கா அரசுடன் பேசி, நாம் குறைக்கவேண்டிய இறக்குமதி வரிகளை நமக்கு முடிந்த அளவு குறைத்து, இந்த வர்த்தக முன்னுரிமை சலுகையை தொடர்ந்து பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். நமது ஏற்றுமதியில் ஒரு கணிசமான அளவு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் மேற்கொள்கிறது என்றநிலையில், அந்த தொழில்களும் நசுங்கிவிடாமல் இருக்க இதை உடனடியாக செய்ய அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

Next Story