உத்வேகம் குறையவில்லை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் கம்பீர் உறுதி


உத்வேகம் குறையவில்லை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் கம்பீர் உறுதி
x
தினத்தந்தி 20 Dec 2017 9:00 PM GMT (Updated: 20 Dec 2017 8:12 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

புதுடெல்லி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த சீசனில் கம்பீர் 8 ஆட்டங்களில் ஆடி 3 சதம், 2 அரைசதம் உள்பட 632 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 8–வது இடத்தில் உள்ளார். 2016–ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற முடியாத 36 வயதான கம்பீர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தொடர்ந்து ரன்களை அடித்து கொண்டு இருக்க வேண்டும். இது தான் நாம் செய்யக்கூடியது. நம் கையில் இல்லாத வி‌ஷயத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. நம் கையில் இருப்பது பேட் ஒன்று தான். அதனை வைத்து எவ்வளவு அதிக ரன்கள் குவிக்க முடியுமோ? அதனை குவிக்க வேண்டும். இதனை தான் நாம் செய்ய வேண்டும். இதை தான் செய்ய நான் முயற்சித்து வருகிறேன். கடந்த ஆண்டில் நான் செயல்பட்டதற்கும், இந்த ஆண்டில் செயல்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு ஆண்டுகளும் எனது உத்வேகத்தில் வித்தியாசம் எதுவும் இல்லை. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. போதிய உத்வேகம் இல்லை என்று உணருகையில் ஆட்டத்தை விட்டு விலகி விடுவேன். அணி தேர்வாளர்களிடம் நான் பேச மாட்டேன். தேர்வாளர்களிடம் பேச வேண்டிய தேவையில்லை. ரன்கள் எடுக்க வேண்டும் என்பதே எனது உடனடி வேலையாகும். அதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். எங்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது உண்மையிலேயே சாதனை தான். இன்னும் ஒரு அடி முன்னேறி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஞ்சி கோப்பையை வென்றால் சிறப்பானதாக இருக்கும். ஒரு சீசனில் 600 ரன்களுக்கு மேல் எடுப்பது நன்றாகும். முக்கிய போட்டியில் சீனியர் வீரராக சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். மும்பை, கர்நாடகா அணிகளை போன்று சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த டெல்லி அணி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.


Next Story