தவானை வம்புக்கு இழுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கு அபராதம் விதித்தது ஐசிசி


தவானை வம்புக்கு இழுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கு அபராதம் விதித்தது ஐசிசி
x
தினத்தந்தி 14 Feb 2018 12:12 PM GMT (Updated: 14 Feb 2018 12:12 PM GMT)

தவானை ஆட்டமிழக்கச் செய்துவிட்டு அநாகரிமாக நடந்து கொண்ட ரபாடாவுக்கு ஐசிசி 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. #ICC #INDvsSA

துபாய்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 73  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்யும் பொழுது, துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானை ஆட்டமிழக்கச்செய்த  தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, ஷிகர் தவானை பார்த்து குட்பை என சொல்வது போல சைகை காட்டி மிகவும் அநாகரிமாக நடந்து கொண்டார். 

ரபாடாவின் செயல் ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் இருந்ததால்,  எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம், ரபாடாவுக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. மேலும், ரபாடாவுக்கு தகுதி இழப்பு புள்ளிகள் ஒன்றும் வழங்கியுள்ளது. ஏற்கனவே, இலங்கைக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இது போல நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், ரபாடாவுக்கு ஏற்கனவே, 3 தகுதி இழப்பு புள்ளிகளும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மோசமாக நடந்து கொண்டதால், ஒரு தகுதி இழப்புகளும் பெற்று இருந்தார். நான்கு தகுதி இழப்பு புள்ளிகளை ரபாடா எட்டியதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

அடுத்த 24 மாதங்களில் ரபாடா எட்டு அல்லது அதற்கு மேலான தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றால், மீண்டும் இரு டெஸ்ட் போட்டிகள் , அல்லது ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஒவர் கிரிக்கெட்டுகள் அல்லது, 4 ஒருநாள் போட்டி/ நான்கு 20 ஓவர் போட்டிகள், எது முதலில் நடைபெறுகிறதோ அந்த வகை போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story