இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அபார வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்  நியூசிலாந்து அபார வெற்றி
x
தினத்தந்தி 7 March 2018 10:15 PM GMT (Updated: 7 March 2018 8:26 PM GMT)

336 ரன் இலக்கை சேசிங் செய்து நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

டுனெடின்,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோ (138 ரன், 14 பவுண்டரி, 7 சிக்சர்), ஜோ ரூட் (102 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) சதம் விளாசினர். அடுத்து 336 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில் இருவரும் டக்-அவுட் ஆனாலும் அடுத்து வந்த ராஸ் டெய்லர் அணியை நிமிர வைத்தார். அவருக்கு கேப்டன் வில்லியம்சன் (45 ரன்), டாம் லாதம் (71 ரன்), கிரான்ட் ஹோம் (23 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர்.

19-வது சதத்தை எட்டியதும் காயமடைந்த ராஸ் டெய்லர், அதை பொருட்படுத்தாமல் நிலைத்து நின்று விளையாடி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 49.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ராஸ் டெய்லர் 181 ரன்களுடன் (147 பந்து, 17 பவுண்டரி, 6 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 10-ந்தேதி நடக்கிறது.

Next Story