‘பேட்ஸ்மேன்களின் மனநிலையை கணித்து பந்துவீசுவது முக்கியம்’ - வாஷிங்டன் சுந்தர்


‘பேட்ஸ்மேன்களின் மனநிலையை கணித்து பந்துவீசுவது முக்கியம்’ - வாஷிங்டன் சுந்தர்
x
தினத்தந்தி 15 March 2018 9:30 PM GMT (Updated: 15 March 2018 9:09 PM GMT)

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சென்னையை சேர்ந்த 18 வயதான வாஷிங்டன் சுந்தர் இதுவரை ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார்

ந்திய சுழற்பந்து வீச்சாளர் சென்னையை சேர்ந்த 18 வயதான வாஷிங்டன் சுந்தர் இதுவரை ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். எந்த ஒரு ஆட்டத்திலும் அவர் 30 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது கிடையாது. நேற்று முன்தினம் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாப்-3 விக்கெட்டுகளை வெளியேற்றி எதிரணியின் வீழ்ச்சிக்கு வித்திட்ட வாஷிங்டன் சுந்தர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘பவர்-பிளே’யில் பந்து வீசுவது நிச்சயம் சவாலான விஷயம். ஆனால் அதற்காகத் தான் கிரிக்கெட் விளையாடுகிறோம். இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சவால்களை வெற்றியாக மாற்றும் போது அது மிகுந்த மனநிறைவை தரும்.

‘பவர்-பிளே’யில் பவுலிங் செய்யும் அளவுக்கு என்னிடம் திறமை இருப்பது நான் பெற்ற அதிர்ஷ்டம் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். பந்து வீசும் போது, பேட்ஸ்மேன்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை கணிக்க வேண்டும். குறிப்பாக பீல்டிங் கட்டுப்பாடு உள்ள பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் ஒவ்வொரு பந்திலும் சிக்சர், பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதையே எதிர்நோக்கி இருப்பார்கள். நானும் ஒரு பேட்ஸ்மேன் என்ற முறையில் எதிரணி பேட்ஸ்மேன் எந்த மாதிரி சிந்திக்கிறார், எந்த பகுதியில் அடிக்க யோசிக்கிறார் என்பதை என்னால் ஓரளவு யூகிக்க முடியும். அது தான் மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு நாளும் முதல் 6 ஓவருக்குள் பந்து வீச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாமல் உற்சாகம் அடைந்து விடுகிறேன். இந்த ஆட்டத்தில் நானும், இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும் வீசிய 8 ஓவர்கள் அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. இருவரும் நன்றாக பந்து வீசினோம். இந்த மைதானத்தில் எந்த ஒரு ஸ்கோரையும் வைத்து அதற்குள் எதிரணியை மடக்குவது என்பது எளிதான விஷயம் அல்ல. வங்காளதேச அணி இங்கு 215 ரன்களை ‘சேசிங்’ செய்ததை பார்த்து இருப்பீர்கள். எனவே திட்டமிட்டு செயல்பட வேண்டி இருந்தது.

இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.

Next Story