கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி 488 ரன்கள் குவிப்பு பாலோ-ஆனை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்


கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி 488 ரன்கள் குவிப்பு பாலோ-ஆனை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
x
தினத்தந்தி 31 March 2018 9:15 PM GMT (Updated: 31 March 2018 9:03 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்தது.

ஜோகன்னஸ்பர்க்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்


ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் (152 ரன்) சதம் அடித்தார். டெம்பா பவுமா (25 ரன்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (7 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். டி காக் 39 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த பிலாண்டர் 12 ரன்னில் வெளியேறினார்.

தென்ஆப்பிரிக்கா 488 ரன்கள்

இதன் பின்னர் பவுமாவும், கேஷவ் மகராஜூவும் ஜோடி சேர்ந்து அணியை வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்தனர். அதிரடி காட்டிய கேஷவ் மகராஜ், லயனின் சுழற்பந்து வீச்சில் மட்டும் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார். இந்த கூட்டணி 9-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் திரட்டியது. கேஷவ் மகராஜ் தனது பங்குக்கு 45 ரன்கள் (51 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அடுத்து வந்த மோர்னே மோர்கல் (0) சந்தித்த முதல் பந்திலேயே ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதனால் பவுமாவின் 2-வது சத வாய்ப்பு நழுவிப்போனது.

தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பவுமா 95 ரன்களுடன் (194 பந்து, 13 பவுண்டரி) களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா திணறல்

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. ஜோ பர்ன்ஸ் (4 ரன்), ரென்ஷா (8 ரன்), ஹேன்ட்ஸ்கோம்ப் (0) வரிசையாக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சில் ‘சரண்’ அடைந்தனர். அணியை சரிவில் இருந்து காப்பாற்ற போராடிய உஸ்மான் கவாஜா 53 ரன்கள் எடுத்த திருப்தியுடன் பெவிலியன் திரும்பினார். சகோதரர்கள் ஷான் மார்ஷ் (16 ரன்), மிட்செல் மார்ஷ் (4 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 110 ரன்களுடன் ஊசலாடிக்கொண்டிருந்தது. கேப்டன் டிம் பெய்ன் (5 ரன்), கம்மின்ஸ் (7 ரன்) களத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய அணி ‘பாலோ-ஆன்’ ஆபத்தை தவிர்ப்பது கடினம் தான். ஏனெனில் பாலோ-ஆனை தவிர்க்க அந்த அணிக்கு இன்னும் 179 ரன்கள் தேவைப்படுகிறது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story