ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை விராட் கோஹ்லிக்கு ஜனாதிபதி வழங்கினார்
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஜனாதிபதி ராம்நாத் இன்று வழங்கினார்.
புதுடெல்லி,
தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அவருக்கு ஜனாதிபதி பதக்கத்தினை அணிவித்து, சான்றிதழையும் வழங்கினார். இதனை பார்வையாளர் வரிசையில் அமர்ந்து இருந்து கோஹ்லியின் மனைவி மற்றும் நடிகையான அனுஷ்கா சர்மா கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
இதனை தொடர்ந்து பளு தூக்குதல் வீராங்கனையான மீராபாய் சானுவுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை ஜனாதிபதி வழங்கினார்.
தமிழகத்தினை சேர்ந்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்ரீனிவாசாராவ், டரக் சின்ஹாவுக்கு (கிரிக்கெட், வாழ்நாள் பங்களிப்பு) துரோணாச்சார்யா விருதினை ஜனாதிபதி வழங்கினார். இதேபோன்று சுபேதார் குட்டப்பா (குத்து சண்டை), விஜய் சர்மாவுக்கு (பளுதூக்குதல்) துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.
சுக்தேவ்சிங் பன்னு (தடகளம்), கிளாரன்ஸ் லோபோவுக்கு (ஹாக்கி, வாழ்நாள் பங்களிப்பு) ஆகியோருக்கும் துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.