வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒருநாள் போட்டி அணியில் ரிஷாப் பான்ட் தினேஷ் கார்த்திக் நீக்கம்


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒருநாள் போட்டி அணியில் ரிஷாப் பான்ட் தினேஷ் கார்த்திக் நீக்கம்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 7:31 PM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்துக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் இடம் பிடித்துள்ளார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் முடிந்ததும், 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்க இருக்கிறது.

இதில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் வருகிற 21-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் 24-ந் தேதியும் நடக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் ஐதராபாத்தில் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

டெஸ்ட் போட்டியில் அசத்தி வரும் 21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் எதிர்பார்த்தபடி ஒருநாள் போட்டி அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டு இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார். கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் விராட்கோலி மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக திரும்பி இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இந்த போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் வருமாறு:- விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, டோனி (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, ஷர்துல் தாகூர்.

பின்னர் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறும் போது, ‘ரிஷாப் பான்ட் விக்கெட் கீப்பர் என்றாலும், இந்த தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார். தேவைப்பட்டால் மாற்று விக்கெட் கீப்பராகவும் இருப்பார். டோனி தான், எங்களது நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் என்பதில் சந்தேகமில்லை. 2-வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு அளித்தோம். இப்போது ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்.’ என்றார்.

Next Story