பாலியல் குற்றச்சாட்டு: இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க தடை


பாலியல் குற்றச்சாட்டு: இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க தடை
x
தினத்தந்தி 15 Oct 2018 10:37 PM GMT (Updated: 15 Oct 2018 10:37 PM GMT)

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி, ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைமை செயல் அதிகாரியாக ராகுல் ஜோரி 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இருந்து வருகிறார். சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் 4 பேரில் இவரும் ஒருவர். இந்த பதவிக்கு வரும் முன்பு ராகுல் ஜோரி தனியார் டெலிவிஷனில் அதிகாரியாக பணியாற்றினார்.

இந்த நிலையில் பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் டெலிவிஷன் நிறுவனத்தில் பணியாற்றுகையில் ராகுல் ஜோரி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று ‘மீடூ’ ஹேஸ்டேக்கில் குற்றம்சாட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி ராகுல்ஜோரிக்கு கெடு விதித்து இருந்தது. விரிவான விளக்கம் அளிக்க தனக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ராகுல் ஜோரி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் சிங்கப்பூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கலந்து கொள்வதாக இருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் ஐ.சி.சி. கூட்டத்தில் ராகுல்ஜோரி கலந்து கொள்வது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி வந்துள்ளது. இதனால் ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க ராகுல் ஜோரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story