ஸ்மித், வார்னரை மீண்டும் அணியில் சேர்க்க நெருக்கடி: ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைவர் திடீர் ராஜினாமா


ஸ்மித், வார்னரை மீண்டும் அணியில் சேர்க்க நெருக்கடி:  ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைவர் திடீர்   ராஜினாமா
x
தினத்தந்தி 1 Nov 2018 8:36 AM GMT (Updated: 1 Nov 2018 8:36 AM GMT)

தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் பீவெர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

மெல்போர்ன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் அது தெளிவாக தெரிய வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணை யில் பேன்கிராஃப்ட் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வார்னர், ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. 

ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்துவிட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் நடைபெற்றது. அதில் டேவிட் பீவெர் 2-வது முறையாக வாரியத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இங்கிலாந்தில் படு தோல்வி அடைந்த அந்த அணி, அடுத்து பாகிஸ்தான் அணியுடன் நடந்த தொடரிலும் படு தோல்வி அடைந்தது. அடுத்து இந்தியாவுடன் மோத உள்ளது. இந்திய அணி இந்த மாதம் 21ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை, 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அங்கு விளையாட உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் தங்கள் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்றால்,ஸ்மித், வார்னரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை டேவிட் பீவெர் மீண்டும் மறுத்தார். 

இந்நிலையில் டேவிட் பீவெர் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். துணைத் தலைவராக இருந்த எர்ல் எட்டிங்ஸ் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறும்போது டேவிட்டின் சேவைக்கு நன்றி. பெண்கள் கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியவர் அவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என்று தெரிவித்துள்ளார்.

Next Story