இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 285 ரன்னில் ஆல்-அவுட்


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 285 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 14 Nov 2018 10:15 PM GMT (Updated: 14 Nov 2018 7:37 PM GMT)

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 285 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஜோஸ் பட்லர், சாம்குர்ரன் அரைசதம் அடித்தனர்.

பல்லகெலே,

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தடுமாறியது. வறண்டு காணப்பட்ட ஆடுகளம் எதிர்பார்த்தது போலவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது. ஜென்னிங்ஸ் (1 ரன்), பென் ஸ்டோக்ஸ் (19 ரன்), கேப்டன் ஜோ ரூட் (14 ரன்), ரோரி பர்ன்ஸ் (43 ரன்), மொயீன் அலி (10 ரன்), விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் (19 ரன்) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.

165 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 200 ரன்களை தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தை தவிர்த்து அதிரடி காட்டினர். இதனால் அணியின் ஸ்கோர் கவுரவமான நிலைக்கு நகர்ந் தது. ஜோஸ் பட்லர் 63 ரன்களும் (67 பந்து, 7 பவுண்டரி), அடில் ரஷித் 31 ரன்களும் (52 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர்.

இதே போல் 20 வயதான சாம்குர்ரனும் இறுதி கட்டத்தில் அசத்தினார். சுழற்பந்து வீச்சில் மொத்தம் 6 சிக்சர்கள் பறக்க விட்டு மிரள வைத்த சாம் குர்ரன், ஜேம்ஸ் ஆண்டர்சனின் (7 ரன், நாட்-அவுட்) ஒத்துழைப்புடன் கடைசி விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தார். குர்ரன் (64 ரன், 119 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) மீண்டும் ஒரு சிக்சருக்கு முயற்சித்த போது எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகிப்போனார்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 75.4 ஓவர்களில் 285 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட் டுகளும், அகிலா தனஞ்ஜெயா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story