ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது நல்லது தான் - முன்னாள் கேப்டன் டிராவிட்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது நல்லது தான் - முன்னாள் கேப்டன் டிராவிட்
x
தினத்தந்தி 20 March 2019 3:18 PM GMT (Updated: 20 March 2019 9:53 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி சந்தித்த தோல்வி நல்லது தான் என்று இந்திய முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் மும்பையில் நேற்று நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவரிடம் ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் மே 30-ந்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் வீரர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்குமே என்பது குறித்து கேட்ட போது டிராவிட் அளித்த பதிலில், ‘உடல்தகுதி விஷயத்தில் பெரும்பாலான வீரர்கள் சாதுர்யமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தனது உடல்நிலை எந்த அளவுக்கு ஒத்துழைக்கும், அதை எப்படி கையாள வேண்டும் என்பது நன்கு தெரியும். அதனால் வீரர்கள் ‘ரிஸ்க்’ எடுப்பார்கள் என்று நினைக்கவில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் அளித்த பேட்டியை படித்தேன். அவர், ஓய்வு எடுத்துக் கொண்டு அணிக்கு திரும்புவதை விட தொடர்ச்சியாக விளையாடும் போது தான் சிறப்பாக பந்து வீசுவது போல் உணர்வதாக கூறியிருந்தார். இந்த விஷயத்தில் ஒவ்வொரு வீரர்களும் வித்தியாசமானவர்கள். ஓய்வு எடுக்கும்படி எல்லா வீரர்களையும் சொல்ல முடியாது. நாம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். உடல்தகுதியுடன் இருப்பதற்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரியும்’ என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 20 ஓவர் கிரிக்கெட்டில் நீங்கள் சந்தித்ததில் சவாலான பவுலராக யாரை குறிப்பிடுவீர்கள் என்று கேட்ட போது, ‘நான் எதிர்கொண்ட பவுலர்களில் கடினமான பவுலர் இலங்கையைச் சேர்ந்த மலிங்காவை (மும்பை இந்தியன்ஸ் அணி) தான். அவர் வீசும் துல்லியமான யார்க்கர் மற்றும் வேகத்தை குறைத்து வீசும் பாங்கு அற்புதமாக இருக்கும்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தற்போது உண்மையிலேயே அபாரமாக பந்து வீசி வருகிறார். ஆனால் நான் அவருக்கு எதிராக விளையாடியதில்லை. அவரது பந்து வீச்சு கிட்டத்தட்ட மலிங்கா இளம் வயதில் வீசுவது போன்று இருக்கிறது’ என்றார்.

சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது குறித்து பேசிய டிராவிட், ‘கடந்த ஓரிரு ஆண்டுகளாக இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதனால் இந்திய அணி உலக கோப்பையை எளிதில் வெல்லும் என்று கருத்து நிலவியது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்பட்ட இந்த தோல்வி நல்லது தான். உலக கோப்பை கிரிக்கெட்டில் நாம் மிக, மிக, நன்றாக விளையாட வேண்டும் என்பதை அந்த தொடரின் முடிவு நினைவூட்டியுள்ளது.

ஆஸ்திரேலிய தொடரை இழந்தாலும், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்பதே எனது கருத்து. ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உலக கோப்பை போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும்’ என்றார்.



Next Story