பந்து ஸ்டம்பை பதம் பார்த்தும் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பிய டோனி


பந்து ஸ்டம்பை பதம் பார்த்தும் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பிய டோனி
x
தினத்தந்தி 1 April 2019 7:23 AM GMT (Updated: 1 April 2019 7:23 AM GMT)

பந்து ஸ்டம்பில் பட்ட பிறகும் பெயில்ஸ் கீழே விழாததால், டோனி நேற்றைய போட்டியில் அவுட் ஆகாமல் தப்பினார்.

சென்னை, 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. முன்னதாக, பேட்டிங்கில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்த கேப்டன் டோனி, 46 பந்துகளில் 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 75 ரன்கள் சேர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன்குவிப்புக்கு முக்கிய காரணியாக விளங்கினார்.

சிக்சர் மழை பொழிந்த கேப்டன் டோனிக்கு நேற்றைய போட்டியில், அதிர்ஷ்டமும் கை கொடுத்தது. ஏனெனில், டோனி தான் சந்தித்த 2-வது  பந்திலேயே அவுட் ஆக வேண்டியது. ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொண்ட டோனி அதை தடுத்து ஆட முயன்றார். ஆனால், பந்து மட்டையில் பட்டு, மெதுவாக உருண்டு சென்று  ஸ்டம்பைத் தாக்கியது. ஆனால் மேலிருந்த பெயில்ஸ் கீழே விழாததால் டோனி அவுட்டாகாமல் தப்பித்தார்.  தோனிக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பயன்படுத்தி அதன் பிறகுதான் சிக்சர் மழை பொழிந்தார். 

இந்த நிகழ்வு நடைபெறும் போது, சென்னை அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டிருந்தது. ஒருவேளை, டோனி அந்த நேரத்தில் ஆட்டமிழந்து இருந்தால்,  போட்டியின் முடிவு சென்னை அணிக்கு பாதகமாக இருந்து இருக்கவும் வாய்ப்புகள் இருந்திருக்கலாம். எனவே, நேற்றைய போட்டியில், சென்னை அணி வெற்றி பெற அதிர்ஷ்டமும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது எனலாம்.

Next Story