‘அரைஇறுதிக்கு முன்னேறாதது ஏமாற்றம் அளிக்கிறது’ - கெய்ல்


‘அரைஇறுதிக்கு முன்னேறாதது ஏமாற்றம் அளிக்கிறது’ - கெய்ல்
x
தினத்தந்தி 5 July 2019 11:21 PM GMT (Updated: 5 July 2019 11:21 PM GMT)

அரைஇறுதிக்கு முன்னேறாதது ஏமாற்றம் அளிப்பதாக வெஸ்ட் இண்டிஸ் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

லீட்ஸ்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 வெற்றி மட்டுமே பெற்று வெளியேறியது. அந்த அணியின் ‘அதிரடி சூறாவளி’ 39 வயதான கிறிஸ் கெய்ல் 9 ஆட்டங்களில் ஆடி 12 சிக்சர் உள்பட 242 ரன்களும், 2 விக்கெட்டும் எடுத்தார். கெய்ல் அளித்த ஒரு பேட்டி வருமாறு:-

5 உலக கோப்பை தொடர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடியதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். நாங்கள் அரைஇறுதிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது.

2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் நான் இரட்டை சதம் அடித்தேன். உலக கோப்பை போட்டியில் எனது சிறந்த செயல்பாடு அதுவாகும். உலக கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்ததை மெச்சத்தகுந்த சாதனையாக கருதுகிறேன். கடினமாக உழைத்தால் அடுத்த உலக கோப்பை போட்டியிலும் (2023) என்னால் விளையாட முடியும். ஆனால் எனது உடலை மேலும் வருத்த நான் விரும்பவில்லை. அது மட்டுமில்லாமல் இந்த முறை கொஞ்சம் தடுமாறி விட்டேன். எனவே இன்னொரு உலக கோப்பை போட்டியில் ஆடுவது குறித்து நான் சிந்திக்கவில்லை. இது தான் எனது கடைசி உலக கோப்பை போட்டியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story