ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து சோயிப் மாலிக் ஓய்வு பெற்றார்


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து சோயிப் மாலிக் ஓய்வு பெற்றார்
x
தினத்தந்தி 6 July 2019 11:37 PM GMT (Updated: 6 July 2019 11:37 PM GMT)

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக் அறிவித்துள்ளார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக் 3 ஆட்டங்களில் ஆடி 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சோயிப் மாலிக்குக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் மைதானத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று சோயிப் மாலிக்குக்கு மரியாதையுடன் விடைகொடுத்தனர்.

போட்டி முடிந்த பின்னர் சோயிப் மாலிக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவேன் என்று எனது முந்தைய பேட்டிகளில் தெரிவித்து இருந்தேன். ஒருநாள் போட்டியில் இருந்து இன்று (நேற்று) ஓய்வு பெறுகிறேன். ஓய்வு பெறுவது குறித்து சில ஆண்டுகளாகவே யோசித்து வந்தேன். ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் ஒருநாள் போட்டியில் விளையாடுவதை நான் அதிகம் நேசித்தேன். ஓய்வால் கிடைக்கும் நேரத்தை எனது குடும்பத்தினருடன் செலவிடுவேன். அத்துடன் 20 ஓவர் போட்டியில் அதிக கவனம் செலுத்த முடியும். கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், என்னுடன் ஆடிய வீரர்களுக்கும், பயிற்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அணிக்கு தேவையான வரிசையில் நான் பேட்டிங் செய்தேன். பல முறை நான் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறேன். கடைசி தருணத்தில் அணிக்காக ரன் குவிக்க முடியாமல் போனது வேதனை அளிக்கிறது. ஒன்றிரண்டு ஆட்டங்களில் மோசமாக ஆடியதை வைத்து ஒருவரின் ஆட்ட திறனை முடிவு செய்வது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

37 வயதான சோயிப் மாலிக் 287 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9 சதம், 44 அரைசதத்துடன் 7,534 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் 158 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். 2016-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சோயிப் மாலிக் இனிமேல் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடுவார். ஓய்வு பெற்ற சோயிப் மாலிக்குக்கு பாகிஸ்தான் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சோயிப் மாலிக் ஓய்வு குறித்து அவருடைய மனைவியும், இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா தனது டுவிட்டர் பதிவில், ‘எல்லா கதைக்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவிலும் ஒரு புதிய தொடக்கம் இருக்கும். சோயிப் மாலிக் நாட்டுக்காக 20 ஆண்டுகள் விளையாடியது பெருமை அளிக்கிறது. இன்னும் தொடர்ந்து அதே மரியாதையுடனும், பணிவுடனும் விளையாட போகிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு சாதனையையும் நினைத்து நானும், நமது மகன் இஸ்ஹானும் பெருமைப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story